பாக். தீவிரவாதிகளை பேசியே கடுப்பாக்கிய அர்ணாப்.. 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு
டெல்லி: 'டைம்ஸ் நவ்' ஆங்கில செய்திச் சேனல் எடிட்டர் அர்ணாப் கோஸ்வாமிக்கு பாகிஸ்தான் தீவிரவாத குழுக்களிடமிருந்து உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அவருக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சத்தமாக விவாதங்கள் செய்வதன் மூலம், வரவேற்புக்கும், எதிர்ப்புக்கும் உள்ளாகி வருபவர் அர்ணாப் கோஸ்வாமி. இவர், பாகிஸ்தானுக்கும், தீவிரவாதிகளுக்கும் எதிராக தொடர்ந்து விவாத நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். குறிப்பாக 'நியூஸ் ஹவர்' என்ற பெயரில் தினமும் இரவு 9 மணிக்கு இவர் நடத்தும் விவாத நிகழ்ச்சி வெகு ஃபேமஸ். அந்த தொலைக்காட்சியின் டிஆர்பியை உச்சத்திற்கு கொண்டு செல்ல அந்த விவாத நிகழ்ச்சியே பெருமளவிற்கு உதவி வருகிறது.
இந்தியா நடத்திய சர்ஜிக்கல் தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக, அர்ணாப் கோஸ்வாமி இன்னும் உக்கிரமாகவும், ஆவேசமாகவும் பேசத்தொடங்கியுள்ளார். இவர் தலைமையிலான அந்த டிவி சேனல் செய்திகளும், விவாதங்களும், மக்களை தூண்டிவிட்டு, அரசின் கொள்கை முடிவுகளை மாற்றுமளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றன. எனவே பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத குழுக்கள் அர்ணாப் மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

உளவுத்துறை அறிக்கை
இந்திய உளவுத்துறை இதுகுறித்த தகவலை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவித்துள்ளது. இதையடுத்து அர்ணாப்புக்கு 'Y' பிரிவு பாதுகாப்பை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து நிருபர்கள், அர்ணாப்பை தொடர்பு கொண்டு கருத்து கேட்க முயன்றபோதும், அவரை அணுக முடியவில்லை.

இருவகை பாதுகாப்புகள்
இந்தியாவை பொறுத்தளவில் இரு வகையில், விஐபிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஒரு பாதுகாப்பு வகை, பதவியை வைத்து தானாக வருவது. உதாரணத்திற்கு, அமைச்சர்கள், நீதிபதிகள் போன்றோருக்கு பதவிக்கு ஏற்ப பாதுகாப்பு இயல்பாகவே வழங்கப்பட்டுவிடும். மற்றொருவகை பாதுகாப்பு என்பது, உயிருக்கு ஏற்படும் அச்சுறுத்தல் அடிப்படையிலானது. பெரும்பாலும் உளவுத்துறை கொடுக்கும் அறிக்கையை கொண்டே, இதுபோன்ற பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அர்ணாப்புக்கும், இந்த வகை அடிப்படையிலேயே பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாம்.

இத்தனை வகை உள்ளது
நமது நாட்டில், இசெட் பிளஸ், இசெட், ஒய், எக்ஸ் ஆகிய பிரிவுகளின்கீழ் பாதுகாப்பு வழங்கப்படும். இசெட்பிளஸ்தான் இருப்பதிலேயே உயர் ரக பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது. இப்பிரிவு பாதுகாப்பில் உள்ளவர்களை சுற்றிலும், 40 பாதுகாப்பு வீரர்கள் இருப்பர். 2 எஸ்கார்ட் வாகனங்களும் இருக்கும். பிரதமர் மோடி, ஜெயலலிதா உள்ளிட்ட விவிஐபிகள் இப்பாதுகாப்பு வளையத்தில் உள்ளனர்.

அர்ணாப்புக்கு 20 காவலர்கள்
இசெட் பிரிவு பாதுகாப்பில் இருப்பவர்களுக்கு, 30 வீரர்கள் பாதுகாப்பும், ஒரு எஸ்கார்ட் வாகனமும் பாதுகாப்புக்கு வழங்கப்படும். ஒய் பிரிவு பாதுகாப்பில் இருப்பவர்களுக்கு 20 பாதுகாவலர்கள் வழங்கப்படுவார்கள். எக்ஸ் பிரிவு பாதுகாப்பில் உள்ளவர்களுக்கு 4 பாதுகாவலர்கள் இருப்பார்கள்.

இசெட் பிளஸ்சே வழங்கியிருக்காங்க
பத்திரிகையாளர் ஒருவருக்கு அரசு பாதுகாப்பு வழங்குவது இது முதல் முறை கிடையாது. ஏற்கனவே ஜீ நியூஸ் பத்திரிகையாளர் சுதீர் சவுத்திரிக்கு எக்ஸ் பிரிவும், சமாச்சார் பிளஸ் ஊடகவியலாளர் உமேஷ் குமாருக்கு ஒய் மற்றும் அஸ்வினி குமார் சோப்ராவுக்கு இசெட் பிளஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்ட நடைமுறை உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications