இட்டாநகர்: அருணாச்சல பிரதேச மாநிலத்திற்குச் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், அங்கு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் வென்று அங்கு பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் முக்கியமானது அருணாச்சல பிரதேசம். கடந்த 2019 முதலே இங்கே பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. அம்மாநில முதல்வராக பாஜகவின் பேமா காண்டு இருந்து வருகிறார்.
நமது நாட்டில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுடன் அருணாச்சல பிரதேசத்திற்குச் சட்டசபைத் தேர்தலும் நடத்தப்பட்டது. முதலாம் கட்ட லோக்சபா தேர்தல் நடந்த ஏப்ரல் 19இல் அருணாச்சல பிரதேசத்திற்கும் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது.
அருணாச்சல பிரதேசம்: அருணாச்சல பிரதேசத்தில் மொத்தம் 60 இடங்கள் இருக்கிறது. அதில் குறைந்தபட்சம் 31 தொகுதிகளில் வெல்லும் கட்சியை ஆட்சியைப் பிடிக்கும். இங்குப் பிரதான கட்சிகளாக பாஜகவும் காங்கிரஸும் உள்ளன.
கடந்த 2019இல் நடந்த அருணாச்சல பிரதேச சட்டசபைத் தேர்தலில் பாஜக 41 இடங்களில் வென்றது. பாஜக கூட்டணியில் இருந்த ஜேடியு 7 தொகுதிகளிலும், என்பிபி கட்சி 5 இடங்களிலும் வென்றது. காங்கிரஸ் கட்சியால் வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது.
பாஜக: இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இங்குள்ள 60இல் 10 தொகுதிகளில் பாஜக ஏற்கனவே போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டது. இந்த 10 தொகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சி வேட்பாளர்கள் அனைவரும் கடைசி நிமிடத்தில் வேட்புமனுவை வாபஸ் பெற்றன. இதனால் பாஜக 10 தொகுதிகளில் போட்டியின்றி வென்றது. இதனால் கடந்த ஏப்ரல் 19இல் தேர்தலே 50 தொகுதிகளுக்கு மட்டுமே நடந்தது.
வாக்கு எண்ணிக்கை: அருணாச்சல பிரதேசத்திற்கு முதலில் லோக்சபா தேர்தல் முடிவுகளுடன் ஜூன் 4இல் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருந்தது. இருப்பினும், அருணாச்சல பிரதேச சட்டசபை ஜூன் 2ஆம் தேதியுடன் நிறைவடைதல், வாக்கு எண்ணிக்கை முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.
காலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டன மொத்த 24 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், அங்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இன்றைய தினம் அதேநேரம் அருணாச்சல பிரதேச சட்டசபைக்கு மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இங்குள்ள (மேற்கு அருணாச்சல பிரதேசம், கிழக்கு அருணாச்சல பிரதேசம்) இரண்டு லோக்சபா தொகுதிகளுக்கு வழக்கம் போல ஜூன் 4ஆம் தேதியே வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
அருணாச்சல பிரதேசத்தில் பாஜக ஏற்கனவே 10 இடங்களில் போட்டியின்றி வென்றுவிட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் பல இடங்களில் முன்னிலை பெற்றது. அங்கு மொத்தம் 60 தொகுதிகள் இருக்கும் நிலையில், அதில் 46 தொகுதிகளில் வென்று பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அங்குள்ள என்பிபி கட்சி 5 இடங்களைக் கைப்பற்றியுள்ளன. இதர கட்சிகள் 8 இடங்களில் வென்றுள்ளன.
அதேநேரம் காங்கிரஸ் கட்சி அங்குப் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. அங்கு ஒரே ஒரு இடத்தில் மட்டுமே காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடிந்தது.
Arunachal Pradesh Assembly Election Result Date and Time (அருணாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள் தேதி மற்றும் நேரம்): Arunachal Pradesh elections results latest updates.