காங்கிரஸ், பாஜகவை விட சிறப்பான ஆட்சி வழங்குவோம்: கெஜ்ரிவால் நம்பிக்கை
டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியால் காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் வழங்கியதை விட சிறந்த அரசை அமைக்க முடியும்' என உறுதிபடத் தெரிவித்துள்ளார் அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்.
நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்களைப் பெற்ற பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சியமைக்க உரிமை கோர மறுத்து விட்டது. இந்நிலையில் அதற்கு அடுத்த இடத்தில் இருந்த ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் தனது ஆதரவினை அளித்து ஆட்சி அமைக்கக் கூறியது.
அதனைத் தொடர்ந்து, மக்களின் கருத்துகளை கேட்டு ஆட்சியமைப்பதாக அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். இது தொடர்பாக சுமார் 25 லட்சம் கடிதங்கள், டெல்லி மக்களுக்கு அக்கட்சி சார்பில் அனுப்பிவைக்கப்பட்டது.
இவற்றுக்கு இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பதில் எழுதியுள்ளனர். இதில் பெரும்பாலானோர், அரவிந்த் கெஜ்ரிவால், ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, வரும் திங்கட்கிழமை ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க அதிகாரப்பூர்வமாக சம்மதம் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்நிலையில், அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
டெல்லியில் ஆம் ஆத்மி, ஆட்சி அமைக்க வேண்டுமா? என கேட்டு மக்களுக்கு அனுப்பிய கடிதங்களில் பெரும்பாலானவர்கள் அரசு அமைக்க ஆதரவாக பதில் எழுதியுள்ளனர். எனினும் வேண்டாம் எனவும் சிலர் பதில் எழுதியுள்ளனர். இரண்டு விதமான கருத்துகளையும் நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். இந்த கருத்துகளின் அடிப்படையில் விரைவில் முடிவு எடுக்கப்படும்.
டெல்லியில் ஆட்சியமைக்க ஆம் ஆத்மி கட்சி தயங்குவதாக எதிர்க்கட்சிகள் நினைப்பது தவறு. எங்களால் அரசியல் களத்தில் நுழைய முடியுமா? என முதலில் அவர்கள் கேட்டனர். நாங்கள் அரசியலில் இறங்கிய போது, எங்களால் தேர்தலில் நிற்க முடியுமா? என்றனர். நாங்கள் தற்போது தேர்தலில் போட்டியிட்டு 28 இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளோம்.
எனவே எங்களை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம். டெல்லியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் வழங்கியதை விட சிறந்த அரசை எங்களால் அமைக்க முடியும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications