கட்சிக்குள் பிளவு இல்லை...: வினோத்குமார் பின்னி பிரச்சினைக்கு கெஜ்ரிவால் விளக்கம்
டெல்லி: அமைச்சர் பதவி கேட்டு ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த வினோத் குமார் பின்னி பிரச்சினை செய்து வருவதாகவும், அதனைத் தொடர்ந்து கட்சிக்குள் பிளவு ஏற்பட்டிருப்பதாகவும் வெளியாகிய தகவலை அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மறுத்துள்ளார்.
நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் 28 இடங்களில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்நிலையில் நேற்று அக்கட்சியின் அமைச்சர்களைத் தேர்ந்தெடுக்கும் கூட்டம் நடைபெற்றது.
அதில், கலந்து கொண்ட அக்கட்சியைச் சேர்ந்த வினோத் குமார் பின்னி என்ற எம்.எல்.ஏ தனக்கு அமைச்சர் பதவி ஒதுக்கப் படாததால் கோபத்தில் கூட்டத்தை விட்டு வெளியேறினார். இதன் மூலம் அக்கட்சிக்குள் பதவிப் போட்டியால் பிளவு ஏற்பட்டுள்ளதாக கருத்துகள் வெளியாயின.
அதனைத் தொடர்ந்து, இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், கட்சிக்குள் பிளவு இல்லை என்பதை தெளிவு படுத்தினார். இது குறித்து அவர் கூறியதாவது:-

மாற்றிப் பேசும் காங்கிரஸ்....
ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக முதலில் காங்கிரஸ் கூறியது. இப்போது பிரச்சினை அடிப்படையில் ஆதரவு என்கிறார்கள். அதை ஏற்கதயார்.

காங்கிரஸ் சர்ச்சை...
ஆம் ஆத்மிக்கு ஆதரவு கொடுத்ததால் காங்கிரஸ் கட்சியில் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். அது அவர்களது பிரச்சினை. அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை.

கவர்னர் அழைக்கவில்லை...
ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க இன்னமும் கவர்னரிடம் இருந்து எனக்கு அழைப்பு வரவில்லை. எனவே நாளை பதவி ஏற்பு விழா நடக்குமா என்று தெரியவில்லை.

ஹசாரேவுக்கு அழைப்பு...
கவர்னரிடம் இருந்து அழைப்பு வந்த பிறகு ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் விழாவில் அன்னா ஹசாரேவை பங்கேற்க அழைப்பேன். புதிய அமைசர்கள் பட்டியலை நான் கவர்னருக்கு அனுப்பி வைத்துள்ளேன்.

தேர்தல் வாக்குறுதிகள்...
பிரசாரத்தின் போது நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறை வேற்றப்படும். அதற்கான தகவல் விவரம் சேகரிக்கும் பணி தொடங்கி விட்டது.

24 மணி நேரத்தில்...
நிறைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். ஆம் ஆத்மி பதவி ஏற்ற 24 மணி நேரத்துக்குள் குடும்பத்துக்கு தினமும் 700 லிட்டர் குடி தண்ணீர் திட்டம் அமல் படுத்தப்படும்.

மிரட்டல் இல்லை....
எம்.எல்.ஏ. வினோத்குமார் பின்னி கட்சி முடிவுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை. அவர் அமைச்சர் பதவி கேட்டு மிரட்டல் விடுக்கவில்லை.

பிளவு இல்லை....
பின்னி எம்.எல்.ஏ. முடிவால் ஆம் ஆத்மி கட்சியில் பிளவு ஏற்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆம் ஆத்மி கட்சியில் எந்த பிளவும் ஏற்படவில்லை' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications