கர்நாடகாவில் பாஜக நினைத்தது ஒன்று, நடப்பது இன்னொன்று!
Recommended Video

பெங்களூர்: கர்நாடகாவில், பாஜக நினைத்தது ஒன்று, நடந்தது மற்றொன்றாக இருக்கிறது.
கர்நாடக சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் 12ம் தேதி நடைபெற உள்ளது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் கடந்த செப்டம்பர் மாதம், கர்நாடகாவில் சுற்றுப் பயணம் செய்தபோது, இங்கு மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 150 தொகுதிகளை பாஜக வெல்லும் என்றார்.
அதாவது 'Mission-150' என இதற்கு பெயர் சூட்டினார். ஆனால் தேர்தலுக்கு 2 நாட்களே உள்ள நிலையில், இப்போது பாஜகவினர் வாயில் அந்த வார்த்தையே வரவில்லை.

மிஷன் 150
ஆரம்பத்தில் சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக் போட்டு பிரபலப்படுத்திய ‘Mission-150' என்ற இலக்கை இப்போது பாஜகவினர் பிரச்சாரத்தில் கூட பேசி கேட்க முடியவில்லை. ஏன் இந்த நிலை, எதற்காக அந்த பேச்சே எடுப்பதில்லை என்பது குறித்து பாஜக வட்டாரத்தில் விசாரித்தபோது, உண்மை தெரிந்தது. சமீபத்தில் வெளியான பெரும்பாலான கருத்து கணிப்புகள் கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமையும் என்றே கூறுகின்றன. எனவே பாஜக அறுதி பெரும்பான்மை கூட பெற முடியாத நிலை உள்ளது.

கர்நாடகாவிலும் வேண்டாம்
எனவேதான் இப்போது வேண்டுமென்றே பாஜகவினர் இந்த ‘Mission-150' வார்த்தையை மறைக்க துவங்கிவிட்டனர் என்கிறார்கள். இதுகுறித்து பெயர் தெரிவிக்க விரும்பாமல் பேசிய பாஜக நிர்வாகி ஒருவர், 182 சட்டசபை தொகுதி கொண்ட குஜராத்தில், பாஜக 99 தொகுதிகளில் வென்றது. 50 சதவீத வாக்குகளை பெற்றது. ஆனாலும், காங்கிரஸ்தான் அங்கே சிறப்பாக செயல்பட்டதை போன்ற தோற்றம் உருவாகிவிட்டது இதற்கு முக்கிய காரணம்.

தொண்டர்கள் பாவம்
இப்போது கர்நாடகாவிலும் பெரும்பான்மை பெற்றால் கூட 150 சீட்டுகளை வெல்ல முடியாவிட்டால் பாஜ தோற்றதை போன்ற தோற்றம் உருவாகும். எனவே, ‘Mission-150'என்ற வார்த்தையை இப்போது பிரயோகிப்பதில்லை என்று தெரிவித்தார் அந்த நிர்வாகி. அதிக டார்கெட்டை நிர்ணயித்து குறைவான சீட்டுகளில் வென்றால் தொண்டர்கள் மனம் சோர்வடையும் என்பது இப்போதெல்லாம் சொல்லாததற்கு காரணம் என்கிறார் மற்றொரு நிர்வாகி.

ஜெயிச்சா மட்டும் போதும்
தேர்தல் நெருங்க நெருங்க, பெரும்பான்மைக்கே போராட்டமாக இருக்கிறது, இதில் மிஷனாவது ஒன்றாவது, ஆட்சியை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்பது மட்டுமே இப்போது ஒரே மிஷன் என்று சிரித்தபடி நகர்ந்தார் மற்றொரு பாஜக டெல்லி பிரமுகம்.












Click it and Unblock the Notifications