வாரான் வாரான் பூச்சாண்டி....பாஜகவிடம் சிக்காமல் காங். கூட்டணி வேட்பாளர்கள் அஸ்ஸாமை விட்டு எஸ்கேப்!
ராய்ப்பூர்/ராஜஸ்தான்: அஸ்ஸாம் சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில் மே 2-ல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படும் வரையில் பாஜகவின் பிடியில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காகக அந்த மாநிலத்தைவிட்டு காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வெளிமாநிலங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் பெரும்பாலான மாநிலங்களில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை கூண்டோடு வளைத்து போடுவது; அவர்களை ராஜினாமா செய்ய வைத்து ஆட்சியை கவிழ்க்க செய்வது என்பதுதான் பாஜகவின் பாணி. கர்நாடகா, மத்திய பிரதேசம் என பல மாநிலங்களில் காங்கிரஸ் இப்படி ஆட்சியை பறிகொடுத்திருக்கிறது.

அஸ்ஸாம் நிலவரம்
தற்போது அஸ்ஸாமில் 3 கட்டமாக சட்டசபை தேர்தல் நிறைவடைந்துள்ளது. அஸ்ஸாமில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைத் தக்க வைக்கலாம் என கருத்து கணிப்புகள் கூறுகின்றன. அதே நேரத்தில் காங்கிரஸ் உருவாக்கியிருக்கும் மெகா கூட்டணியைவிட சில இடங்களில்தான் பாஜக கூடுதலாக வெல்ல முடியும் என்றும் கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. அனேகமாக இரு அணிக்கும் சமமான இடங்களுக்கும் வாய்ப்பு இருக்கிறது என்கிற கணிப்பும் உள்ளது.

அஸ்ஸாமில் இருந்து வெளியேற்றம்
இதனால் சட்டசபை தேர்தல் முடிவடைந்த பின்னர் எப்படியும் காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏக்களை பாரதிய ஜனதா கட்சி வளைக்கத்தான் செய்யும். இதனை உணர்ந்தே காங்கிரஸ், ஏயூடிஎப், போடோலாந்து முன்னணி உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் இப்போதே அஸ்ஸாமை விட்டு வெளியேறிவிட்டனர்.

சத்தீஸ்கர், ராஜஸ்தானில் தஞ்சம்
காங்கிஸ் ஆட்சி செய்கிற சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு இந்த வேட்பாளர்கள் படையெடுத்துள்ளனர். கடந்த காலங்களில் எம்.எல்.ஏக்கள்தான் இப்படி மாநிலம் விட்டு மாநிலங்களுக்கு படையெடுத்தனர். இப்போது வேட்பாளர்களையே பதுக்கி வைக்கும் நிலையை பாஜக உருவாக்கி வைத்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா, இது எங்கள் கூட்டணி எம்.எல்.ஏக்களை பாதுகாக்கிற முயற்சிதான். பாரதிய ஜனதா கட்சியின் எந்த ஒரு முயற்சிக்கும் நாங்கள் இடம் தந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications