முதல்வர்களை நீக்க திட்டம்... காங். தலைமை முடிவுக்கு கட்டுப்படுவேன் - அசாம் முதல்வர் அறிவிப்பு
கவுகாத்தி: மாநில முதல்வர்களை நீக்கும் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப் படுவேன் எனத் தெரிவித்துள்ளார் அசாம் முதல்வர் தருண் கோகாய்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஆளும் கட்சியாக உள்ள அசாம், அரியானா மற்றும் மராட்டிய மாநிலங்களிலும் கூட படுதோல்வியைச் சந்தித்தது காங்கிரஸ். அதன் எதிரொலியாக விரைவில் வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு மூன்று மாநில முதல்வர்கள் மற்றும் 10 மாநில தலைவர்களை நீக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பான அறிவிப்பு வரும் வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்நிலையில், நேற்று இது தொடர்பாக அசாம் முதல்வர் தருண் கோகாயிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது தன்னை மாற்ற முடிவு காங்கிரஸ் கட்சி செய்துள்ளாக வெளியான தகவலை தருண் கோகாய் உறுதி படுத்த மறுத்துவிட்டார்.
மேலும், இது தொடர்பாக தான் ஆம் என்றோ, இல்லை என்றோ கூறப்போவதில்லை. கட்சி தலைமை எந்த முடிவை எடுத்தாலும் அதற்கு தான் கட்டுப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதோடு, இது உயர்மட்டகுழுவில் எடுக்கப்பட வேண்டிய முடிவு, கட்சியின் உயர்மட்ட குழுவை திங்கள் கிழமை சந்திக்கிறோம். காங்கிரஸ் ஆளும் அனைத்து மாநில முதல் மந்திரிகளும் இந்த கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என தருண் கோகாய் கூறியுள்ளார்.