”பிரதமர் அமித்ஷா, உள்துறை அமைச்சர் மோடி” ஸ்லிப் ஆன அசாம் முதலமைச்சர் நாக்கு - கலாய்க்கும் காங்கிரஸ்
கவுஹாத்தி: அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பொதுமேடையில் பிரதமர் என அழைத்தது தற்போது விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.
பாஜக ஆளும் அசாம் மாநிலத்தின் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருகிறார்.
அசாம் மக்களின் குடியுரிமை தொடர்பான அவரது கருத்துக்கள், மதவெறி பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் பலரால் அதிகளவில் சர்ச்சையை கிளப்பு வருகின்றன.
பிரதமர் அமித்ஷா
அந்த வகையில் அவரது பழைய சர்ச்சை கருத்துக்களை எல்லாம் ஓரம்கட்டும் வகையில் புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் ஹிமந்தா பிஸ்வா சர்மா. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட பொதுக்கூட மேடையில் அசாமி மொழியில் ஹிமந்தா பிஸ்வா சர்மா உரையாற்றிக்கொண்டு இருந்தார். அப்போது பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து பேசிய அவர், "பிரதமர் அமித்ஷா, உள்துறை அமைச்சர் நரேந்திர மோடி" என மாற்றி சொல்லிவிட்டார்.
|
வைரல் வீடியோ
உடனே சுதாரித்துக்கொண்ட ஹிமந்தா பிஸ்வா சர்மா, தான் தவறாக சொன்னதை உணர்ந்து மாற்றிக்கொண்டார். இந்த நிலையில் பிரதமர் அமித்ஷா என அசாம் முதலமைச்சர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. வேகமாக பேசிக் கொண்டிருந்தபோது முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தவறுதலாக பேசிவிட்டதாக பாஜகவினர் விளக்கமளித்து வருகின்றனர்.
சந்தேகம் கிளப்பும் காங்கிரஸ்
ஆனால், அந்த வீடியோவை தங்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அசாம் மாநில காங்கிரஸ் கட்சி, "பாஜகவை சேர்ந்த சர்பானந்த சோனோவால் அசாம் முதலமைச்சராக இருந்தபோது பாஜக எம்.பி. பல்லாப் லோசன் தாஸ், அசாமின் அடுத்த முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாதான் எனப்பேசினார். அதேபோல் அவர் முதலமைச்சராகிவிட்டார்.
அமித்ஷாவுக்கு புரோமோஷனா?
அதே பாணியில் பாஜக தலைமை நரேந்திர மோடிக்கு மாற்றாக அடுத்த பிரதமரை தேர்வு செய்துவிட்டதா? அல்லது அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இப்போதே பிரபலப்படுத்தும் வேலைகளில் இறங்கிவிட்டார்களா?" எனக் கேள்வி எழுப்பி இருக்கிறது.