சூனியக்காரி என சந்தேகம்... 63 வயது பெண்ணின் தலையைத் துண்டித்துக் கொன்ற கிராம மக்கள்
கவுகாத்தி: அசாமில் சூனியக்காரி எனச் சந்தேகித்து 63 வயது பெண்ணின் தலையைத் துண்டித்து கிராம மக்கள் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம் சோனிட்பூர் மாவட்டம் விமாஜூலி கிராமத்தைச் சேர்ந்தவர் மோனி ஓராங்(60). இவர் பில்லி, சூனியம், செய்வினை உள்ளிட்ட மாந்திரிக வேலைகளைச் செய்து வந்ததாக, கிராம மக்கள் இடையே தகவல் பரவியது.
அதனைத் தொடர்ந்து, நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மோனியின் வீட்டை முற்றுகையிட்டனர். பின்னர் வீடு புகுந்து மோனியை வெளியே இழுத்து வந்த மக்கள், அவரை அடித்து உதைத்தனர்.
அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் மோனியின் கழுத்தை வெட்டியுள்ளான். இதில் சம்பவ இடத்திலேயே மோனி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால், அவரை ஊரின் உள்ளே நுழைய கிராம மக்கள் அனுமதிக்கவில்லை. பின்னர் கூடுதல் போலீஸ் படை துணையுடன் கூட்டத்தை அடித்து, விரட்டிய போலீசார் மோனியின் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் பலரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மோனி பில்லி சூனிய வேலைகள் செய்வதாக அதே ஊரைச் சேர்ந்த பூசாரி ஒருவரின் தூண்டுதலாலேயே கிராம மக்கள் இந்தக் கொலையைச் செய்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோனிட்பூர் மாவட்ட மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.