நிதிஷ்- லாலுவின் கூட்டணியால் பீகாரில் அமோகமாக "மறுவாழ்வு" பெற்ற காங்கிரஸ்!
பாட்னா: பீகாரில் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக இருந்த காங்கிரஸ் கட்சியானது நிதிஷ்குமார், லாலு பிரசாத் ஆகியோரது கூட்டணியில் சேர்ந்து அமோகமாக மறுவாழ்வு பெற்றுள்ளது.
பீகார் மாநிலத்தில் 1990 வரை ஆளும் கட்சியாக இருந்தது காங்கிரஸ் கட்சி. 1990ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 71 இடங்களில் மட்டுமே வென்று லாலுவிடம் மரண அடி வாங்கியது காங்கிரஸ்.
அதன் பின்னர் பீகார் மாநிலத்தில் தமிழகத்தைப் போல காங்கிரஸ் கட்சியால் எழவே முடியாமல் போனது. 1995ஆம் ஆண்டு தேர்தலில் 29, 2000ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 14, 2005ஆம் ஆண்டு தேர்தலில் 10 என்று கேட்பாரற்ற கட்சியாகப் போனது.

அதுவும் கடந்த 2010ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 243 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெறும் 4 இடங்களில்தான் வென்றது. இப்படி பீகாரில் காங்கிரஸ் பேரியக்கம் அழிந்தே போன நிலையில்தான் தற்போதைய தேர்தலில் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஈகோ பார்க்காமல் காங்கிரஸ் கை கோர்த்தது.
காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டது. இன்றைய தேர்தல் முடிவுகளில் 20க்கும் அதிகமான தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றும் நிலை உள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் உற்சாகத்தையே தந்துள்ளது.
பீகாரில் தேடப்படுகிற நிலையில் இருந்த காங்கிரஸ் கூட்டணி புண்ணியத்தில் இப்போது அமோகமாக மறுவாழ்வு பெற்று இருப்பது அக்கட்சியினருக்கு நம்பிக்கையை விதைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications