ம.பி.யில் சிவ்ராஜ்சிங், ராஜஸ்தானில் வசுந்தராராஜே முதல்வராகின்றனர்- கருத்து கணிப்பு
டெல்லி: மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் என்று 'Samay Hub Pulse' கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samay Hub Pulse கருத்துக் கணிப்பில் மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்றுவதன் மூலம் மீண்டும் மூன்றாவது முறை முதல்வர் என்ற பெருமையை தட்டிச் செல்லப் போகிறாராம் சிவ்ராஜ்சிங் சவுகான்.
அதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் அசோக் கெலாட் தலைமையிலான அரசை பாஜகவின் வசுந்தராஜே சிந்தியா வீழ்த்தி முதலமைச்சர் பதவியைக் கைப்பற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ம.பி.யில் பாஜகவுக்கு இடம் குறைவு
மத்திய பிரதேசத்தில் தற்போது தேர்தல் நடைபெற்றால் மொத்தம் உள்ள 230 இடங்களில் 124 இடங்களை பாஜக பெறலாம். கடந்த 2008 தேர்தலில் 143 இடங்களை அக்கட்சி பெற்றிருந்தது. 19 இடங்கள் குறைவாகப் பெற்றாலும் பெரும்பான்மைக்கு பிரச்சனை இருக்காதாம்.

வாக்கு சதவீதம்
பாஜகவுக்கு 37% வாக்குகளும் காங்கிரஸுக்கு 34% வாக்குகளும் கிடைக்குமாம்.

சிவ்ராஜ்சிங் சவுகானுக்கு 52% ஆதரவு
மாநில முதல்வராக சிவ்ராஜ்சிங் சவுகான் தொடர 52% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு 21% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல் சிவ்ராஜ்சிங்கின் செயல்பாடு திருப்தி அளிப்பதாக 58% பேர் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் கெஜ்ரிவால் கட்சியால் பாதிப்பு
இக்கருத்துக் கணிப்பில் டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக, காங்கிரஸ் இரண்டையும் கெஜ்ரிவால் கட்சி பதம் பார்க்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 17 அல்லது 22 இடங்கள் கெஜ்ரிவால் கட்சிக்கு கிடைக்கும் என்றெல்லாம் கூறப்பட்டாலும் இக்கருத்து கணிப்பானது 6 இடங்கள்தான் கிடைக்கும் என்கிறது.

காங்கிரஸ்- பாஜக கடும் போட்டி
பாரதிய ஜனதாவுக்கு 32 இடங்களும் காங்கிரஸுக்கு 31 இடங்களும் கிடைக்குமாம்.

சத்தீஸ்கரில் கடும் போட்டி
சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறதாம். ஆளும் பாஜக 46 இடங்களையும் காங்கிரஸ் 42 இடங்களையும் கைப்பற்றுமாம். 2008 தேர்தலில் பாஜகவுக்கு 50 இடங்கள் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications