பலன் கேட்டு சென்ற ஐடி நிறுவன பெண் ஊழியரை, பலாத்காரம் செய்த பெங்களூரு நாடி ஜோதிடர்!
பெங்களூரு: நாடி ஜோதிடம் பார்க்க போன ஐடி பெண் ஊழியரை பலாத்காரம் செய்த ஜோதிடர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
பெங்களூரு ராமமூர்த்தி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹொய்சாலா நகரில் அகஸ்தியர் நாடி ஜோதிடம் என்ற பெயரில் ஜோதிடம் பார்த்து வருபவர் தாமோதரன். தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்.
இவரது கணிப்புகள் சரியாக உள்ளதாக கேள்விப்பட்டுள்ளார் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவரும், பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியிலுள்ள உலக புகழ் பெற்ற ஒரு ஐடி நிறுவனத்தின் ஊழியருமான மம்தா (25, பெயர் மாற்றப்பட்டுள்ளது).
எனவே தனது திருமண வரன் குறித்து விளக்கம் கேட்பதற்காக, தனது ஆண் நண்பர் ஒருவருடன் ஜோதிடரின் வீட்டுக்கு மம்தா சென்றார். மம்தாவின் அழகில் மயங்கிய தாமோதரன், அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று உட்கார செய்துவிட்டு, உடன் வந்த நண்பரை வீட்டுக்கு வெளியே நிற்குமாறு சொல்லியுள்ளார்.
ஏன் வெளியே போக வேண்டும் என்று அந்த நண்பர் கேட்டதற்கு, ஒருவருக்கு பலன் சொல்லும்போது மற்றொருவர் உடன் இருப்பது தவறு என்று தாமோதரன் கூறியுள்ளார். நாடி ஜோதிடர்கள் பெரும்பாலும் இப்படித்தான் சொல்வார்கள் என்பதால் தாமோதரனின் பேச்சை நம்பி அந்த நண்பரும் வெளியே போயுள்ளார்.
இதனிடையே மம்தாவுக்கு பலன் சொல்ல ஆரம்பித்தார் தாமோதரன். பெரும்பாலும் சரியாகவே கணித்து சொல்லியதால் மம்தா மகிழ்ச்சியடைந்தார். முதல் ஒரு மணி நேரம் இப்படி இருந்த நிலையில், புனித தீர்த்தம் என்று கூறி ஒரு தீர்த்தத்தை குடிக்குமாறு மம்தாவிடம் சொல்லியுள்ளார் தாமோதரன். இதை அப்படியே செய்துள்ளார் மம்தா.
ஆனால் தீர்த்தத்திற்குள் மயக்க மருந்தோ அல்லது போதை மருந்தோ கலந்திருந்ததால் மம்தா மயக்க நிலைக்கு சாய்ந்தார். அப்போது அவரிடம் தாமோதரன் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதன்பிறகு வெளியே ஓடிவந்த மம்தா, ஆண் நண்பருடன் சேர்ந்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் விரைந்து சென்று தாமோதரனை கைது செய்துள்ளனர்.