பிளஸ் டூ தேர்வில் மகனை விட அதிக மார்க் வாங்கிய 37 வயது தாய்
டிஸ்புர்: அஸ்ஸாமில் பிளஸ் டூ தேர்வு எழுதிய 37 வயது பெண் தனது மகனை விட அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
அஸ்ஸாம் மாநிலம் திப்ருகர் மாவட்டத்தில் உள்ள திகோவ்கினார் சாங்மைகாவ்ன் கிராமத்தைச் சேர்ந்தவர் நயன்மோனி பெஸ்பருவா(37). காய்கறி விற்பவரின் மனைவி. நயன்மோனிக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் நயன்மோனி தினமும் காலை 4 மணிக்கு எழுந்து வீட்டு வேலைகளை முடித்துவிட்டு தினமும் 12 கிலோமீட்டர் சைக்கிளை அழுத்தி கோவங் பிதுபோர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று படித்து வந்தார்.

இந்நிலையில் அவரது மூத்த மகன் அங்கூர்(18) தந்தைக்கு உதவியாக காய்கறி விற்பனை செய்து கொண்டே படித்தார். தாயும், மகனும் பிளஸ் டூ தேர்வு எழுதினர். இதில் நயன்மோனி 69.8 சதவீத மதிப்பெண்கள் பெற்று பர்ஸ்ட் கிளாஸில் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால் அவரது மகனால் தேர்ச்சி பெறும் அளவுக்கு மட்டுமே மதிப்பெண்கள் பெற முடிந்தது.
தான் நல்ல மதிப்பெண்கள் பெற்றபோதிலும் மகன் குறைவாக மதிப்பெண்கள் பெற்றுள்ளதை நினைத்து நயன்மோனி கவலையில் உள்ளார். 18 வயதில் திருமணமான நயன்மோனி உள்ளூரில் உள்ள பள்ளியில் நடந்த நிகழ்ச்சிகளில் தனது குழந்தைகளை பங்கேற்க வைத்துள்ளார். அவரது ஆர்வத்தை பார்த்த ஆசிரியர்கள் அவரை மீண்டும் பள்ளிக்கு சென்று படிக்குமாறு வலியுறுத்தினர்.
இதையடுத்து அவர் கடந்த 2013ம் ஆண்டு தனது மகனுடன் சேர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதினார். இருவரும் செகண்ட் கிளாஸில் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications