டாப் கியருக்கு மாறும் காங்கிரஸ்! உதய்பூரில் அனல் பறந்த விவாதங்கள்.. விரைவில் அதிரடி மாற்றங்கள்
ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சியின் உதய்பூர் சிறப்புச் சிந்தனை அமர்வு கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இதன் காரணமாக அக்கட்சியில் முழு மறுசீரமைப்பைச் சேர்ந்து, பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று அக்கட்சிக்குள்ளேயே குரல்கள் எழுந்துள்ளன.
இந்தச் சூழலில் தான், பிரசாந்த் கிஷோர் சோனியா காந்தியைச் சந்தித்து தனது திட்டத்தை விளக்க, அவர் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று கூறப்பட்டது. இருப்பினும், அது கடைசி நேரத்தில் நடக்காமல் போனது.
ஏன்... எதற்கு... பிரதமர் மோடி பத்திரிகையாளர்களை சந்திப்பது இல்லை? காங்கிரஸ் சரமாரி கேள்வி
காங்கிரஸ் மறுசீரமைப்பு
இதையடுத்து காங்கிரஸ் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. இதற்காக ராஜஸ்தானின் உதய்பூரில் சிறப்புச் சிந்தனை அமர்வு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் நாடு முழுவதும் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், சிந்தனை அமர்வு கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
முக்கிய முடிவுகள்
இதற்கு முன்னர், இதுபோல நடைபெற்ற அமர்வுகளில், கொள்கை ரீதியான அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தது. ஆனால், ராஜஸ்தான் கூட்டத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தே முக்கியமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கட்சி பதவிகளில் 50 சதவிகிதத்தை 50 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு ஒதுக்குவது, நாடாளுமன்றக் குழு மற்றும் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் சீட் உள்ளிட்ட விஷயங்கள் அடங்கும்.
சோனியா & பிரியங்கா காந்தி
அதேபோல கட்சி பதவிகளுக்கு அதிகபட்சமாக ஐந்தாண்டு பதவிக் காலத்தை நிர்ணயிக்கக் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அதன் பின்னர் 3 ஆண்டுகள் அவர்கள் அப்பதவியில் இருந்து விலக்கி வைக்கப்படுவார்கள். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பல்வேறு குழு விவாதங்களில் பங்கேற்றனர். சோனியா காந்தி அரசியல் மற்றும் கட்சி விவாதங்களில் பங்கேற்றார். பிரியங்கா காந்தி கட்சியின் நிலைப்பாட்டை வகுப்பதற்கான ஆலோசனைகளில் பங்கேற்றதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ராகுல் காந்தி
அடுத்த காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ராகுல் காந்தி, குழு விவாதங்களில் தொடர்ந்து குறிப்புகளை எடுத்துக்கொண்டு இருந்தார். அதேநேரம் அடுத்து காங்கிரஸ் தலைவர் பதவிக்குத் தான் போட்டியிடுவேனா என்பது குறித்து ராகுல் காந்தி இன்னும் தனது முடிவை அறிவிக்கவில்லை. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மோசமான தோல்வியைத் தொடர்ந்து அவர் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. இப்போதும் அவர் நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் கட்சியை வழிநடத்த வேண்டும் என்றே விரும்புவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிருப்தி
காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி தலைவர்களாக அறியப்படுபவர்களில் கபில் சிபலைத் தவிர்த்து, மற்ற அனைவரும் இந்த அமர்வில் பங்கேற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் மாநாட்டில் ஒன்றாகவே இருந்தனர். மாநாட்டில் ஒருமித்த கருத்து வந்தவுடன் அவர்கள் அனைவரும் அறிக்கை வெளியிடலாம் என்று கூறப்படுகிறது.