பதன்கோட் தாக்குதல்: 2வது நாளில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொலை.. மொத்தம் 5 பேர் வீழ்த்தப்பட்டனர்
பதன்கோட்: பஞ்சாப் மாநிலம் பதன்கோட் நகரில் உள்ள விமானப்படைத் தளத்திற்குள் புகுந்த தீவிரவாதிகளை வேட்டையாடும் பணி இன்றும் தொடர்ந்தது. நேற்று 4 பேர் கொல்லப்பட்ட நிலையில், இன்று மேலும் ஒருவனை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். இன்னும் ஒருவன் உள்ளே பதுங்கியுள்ளான். அவனை உயிருடன் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2 தீவிரவாதிகள் உள்ளே பதுங்கியிருப்பதை எல்லைப் பகுதி டிஐஜி கன்வர் விஜய் பிரதாப் சிங் முன்பு உறுதிப்படுத்தியிருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாக முதலில் கருதப்பட்டது. ஆனால் தற்போது மேலும் 2 பேர் உள்ளே உள்ளனர். அவர்கள் தரப்பிலி்ருந்து பாதுகாப்புப் படையினரை நோக்கி சுட்டு வருகின்றனர். இருப்பினும் இருவரையும் உயிருடன் பிடிக்க வேண்டும் என்று முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்புப் படையினர் முன்னேறி வருகின்றனர் என்றார் சிங்.

இந்த நிலையில், இன்று மாலை 5 மணியளவில் மத்திய உள்துறைச் செயலாளர் ராஜீவ் மகரிஷி செய்தியாளர்களைச் சந்தித்து பதன்கோட் விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஜனவரி 1ம் தேதி தீவிரவாதிகள் ஊடுறுவல் தொடர்பாக உளவுத்துறை தகவல் அளித்தது. இதையடுத்து மாநிலப் போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
தீவரவாதிகள் யாரும் தப்பி ஓடி முடியாத அளவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால்தான் தாக்குதல் நடத்த துணிந்த தீவிரவாதிகளால் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.
உளவுத்துறை தகவல் எங்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. இதனால்தான் வேகமாக செயல்பட முடிந்தது. தற்போது 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். தேடுதல் வேட்டை தற்போது தீவிரமாக உள்ளது. நாளை வரை இது தொடரும்.
நமது தரப்பில் 12 என்எஸ்ஜி கமாண்டோக்கள் காயமடைந்துள்ளனர். ராணுவ, விமானப்படை தரப்பில் 8 பேர் காயமடைந்துள்ளனர். என்எஸ்ஜியைச் சேர்ந்த லெப்டினென்ட் கர்னல் நிரஞ்சன் உயிரிழந்துள்ளார். விமானப்படைத் தரப்பில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜனவரி 2ம் தேதி தீவிரவாதிகளை வான்வழி கண்காணிப்பின் மூலம் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்து விட்டனர். உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால் நமது வேலை எளிதாக போய் விட்டது.
தீவிரவாதிகளின் முக்கிய நோக்கம், விமானப்படைத் தளத்தை தகர்த்து பெரும் சேதத்தை ஏற்படுத்துவது. ஆனால் அது தகர்க்கப்பட்டு விட்டது. நமது தளத்திற்கு ஒரு சேதமும் இல்லை. சின்ன அளவிலான சேதம் கூட ஏற்படவில்லை.
உளவுத்துறையும், பாதுகாப்புப் படைகளும் இணைந்து செயல்பட்டதால்தான் சிறிய அளவிலான சேதம் கூட இல்லாமல் நாம் பார்த்துக் கொள்ள முடிந்தது என்றார்.
கையெறி குண்டுகள்
இதற்கிடையே, விமானப்படை நிலையத்திற்குள் கையெறி குண்டுகளை தீவிரவாதிகள் போட்டு வைத்துள்ளனர். அவற்றை அப்புறப்படுத்தும் வேலையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒன்றுதான் இன்று காலை வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விமான தளத்திற்குள் வெளியேயும் தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications