அடல்பிஹாரி வாஜ்பாய் 89வது பிறந்தநாள்: பாஜக கொண்டாட்டம்
டெல்லி: முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 89 வது பிறந்த நாளை பாஜகவினர் நாடு முழுவதும் கோவில்களில் பூஜை செய்தும், அன்னதானம் உள்ளிட்டவற்றை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
வாஜ்பாய் பிறந்த நாளை ஒட்டி தலைவர்கள் நரேந்திரமோடி, அருண் ஜெட்லி, நிதின்கட்கரி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.
குஜராத் முதல்வர் நரேந்திரமோடி டுவிட்டர் தளத்தில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், பாஜகவின் மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் பிரதமருமான அடல் ஜி நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

குவாலியர் நாயகன்
மத்தியபிரதேச மாநிலம் குவாலியர் நகரில் கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாய் மற்றும் கிருஷ்ணா தேவி தம்பதியருக்கு மகனாக ஒரு நடுத்தர வர்க்க பிராமண குடும்பத்தில், டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி, 1924 ஆம் ஆண்டில் பிறந்தார் வாஜ்பாய். அவரது தந்தை ஒரு கவிஞர் மற்றும் பள்ளி ஆசிரியர்.

அரசியலில் பட்டம்
சமஸ்கிருதத்தில் இளங்கலைப் பட்டம் அரசியலில் முதுகலைப்பட்டம் பெற்ற வாஜ்பாய், இந்துமத அமைப்பான ‘ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்'ன் ஒரு முழுநேர தொழிலாளியாக மாறினார். நாளடைவில் பத்திரிக்கையாளராக மாறிய அவர், ‘ராஷ்ட்ர தர்மா', ‘பஞ்ச்ஜன்யா', ‘ஸ்வதேஷ்' மற்றும் ‘வீர் அர்ஜுன்' போன்ற நாளிதழ்களைத் திருத்தும் பணியில் ஈடுபட்டார். ஆர். எஸ். எஸ்-ன் முழு நேர ஊழியர்கள் போலவே, அவர் இறுதி வரை திருமணமாகாமலேயே ஒரு பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார்.

வெள்ளையனே வெளியேறு
ஆங்கிலேயர் எதிர்ப்பு போராட்டமான வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில், தனது மூத்த சகோதரரான பிரேம் என்பவருடன் கைதாகி சிறை சென்ற அவர், 23 நாட்கள் கழித்து விடுதலையானார். ஆர். எஸ். எஸ். சின் ஒரு அமைப்பான ‘பாரதிய ஜன சங்'-ன் ஒரு பகுதியாக மாறிய அவர், அதன் தலைவரான ஷ்யாமா பிரசாத் முகர்ஜியுடன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்ததன் பேரில், கைது செய்யப்பட்டார். சிறையிலே முகர்ஜி அவர்கள் மரணமடைந்ததால், அவர் 1957ல் பல்ராம்பூர் தொகுதியிலிருந்து மக்களவைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாரதீயஜனதாவின் ஆணிவேர்
மக்களவைக்கு 9 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், முன்னாள் ஜன சங்கம் அரசியல் கட்சியை (இன்றைய பாரதிய ஜனதா கட்சி) நிறுவினார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த அவர், பாரதிய ஜனதா கட்சியின் ஆணிவேரென்று அக்கட்சி உறுப்பினர்களால் அழைக்கப்படுகிறார்.

சிறந்த தலைவர்
அடல் பிஹாரி வாஜ்பாய், நமது சுதந்திர இந்தியாவின் 10வது பிரதமராக பதவியேற்றார். 3 முறை பிரதமர் பதவி வகித்த தலைவராவராக போற்றப்படும் இவரது ஆட்சி காலத்தில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. நாட்டின் நான்கு பகுதிகளையும் தரைவழியாக இணைக்கும் தங்க நாற்கர சாலை திட்டம் இவரது ஆட்சியின் மிகப்பெரிய சாதனையாகும்.

கார்க்கில் நாயகன்
1999 ஆம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தானுக்கிடையே நடந்த ‘கார்கில்' போரில் இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் விஜய்' என்ற செயல்பாட்டை செயல்படுத்தி, பாகிஸ்தான் ராணுவத்திற்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதால், அப்போதைய பாகிஸ்தான் பிரதமரான நவாஸ் ஷெரிப் போரை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார். கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது, அவர்களின் தலைமையை மிகவும் தைரியமான மற்றும் வலுவானத் தலைமை என்று நாடு முழுவதும் போற்றச்செய்தது.

சிறந்த கவிஞர்
வாஜ்பாய், ஒரு சிறந்த கவிஞரும் கூட. அவர், ‘ட்வென்டி-ஒன் போயம்ஸ்', ‘க்யா கோயா க்யா பாயா: அடல் பிஹாரி வாஜ்பாய், வ்யக்தித்வா அவுர் கவிதம்', ‘மேரி இக்யாவனா கவிதம்', ‘ஸ்ரேஷ்ட கபிதா', எனப் பல கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார்.

விருதுகள்
இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பத்ம விபூஷன்' விருதை வென்ற வாஜ்பாய், ‘லோகமான்ய திலகர் விருது', ‘சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருது', ‘பாரத ரத்னா பண்டிட் கோவிந்த் வல்லப பந்த் விருது' எனப் பல விருதுகளை வென்றுள்ளார்.

நாடு போற்றும் பிரதமர்
இந்தியாவின் சிறந்த பிரதமர்கள் வரிசையில் வாஜ்பாய்க்கும் முக்கிய இடமுண்டு. இன்று 89வது பிறந்த நாளைக் கொண்டாடும் அவர், நினைவு தப்பிய நிலையில், சக்கர நாற்காலியோடு முடங்கிப் போயுள்ளார் என்பதுதான் வேதனை.












Click it and Unblock the Notifications