பஞ்சாப் தீவிரவாத தாக்குதல் பற்றி தற்போதைக்கு விவரம் அளிக்க முடியாது: மத்திய அமைச்சர் ரூடி
டெல்லி: பஞ்சாபில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்து வருவதால் அது குறித்து தற்போதைக்கு எந்த விபரமும் அளிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் தினாநகரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர், 2 போலீசார் மற்றும் குர்தாஸ்பூர் எஸ்.பி. பல்ஜீத் சிங் ஆகியோர் பலியாகியுள்ளனர். தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் கட்டிடத்தை ராணுவத்தினர் சுற்றிவளைத்துள்ளனர்.
ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது.
இந்நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறுகையில்,
தீவிரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கிச்சூடு தொடர்ந்து நடந்து வருகிறது. அதனால் தற்போதைக்கு அது குறித்த விவரத்தை அளிக்க முடியாது. இது குறித்த விவரத்தை அளிக்குமாறு நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கேட்டனர். விவரத்தை தெரிவிக்கலாம் என்று அரசு முடிவு செய்ததும் தெரிவிக்கப்படும் என்றார்.
பஞ்சாப் நிலவரம் பற்றி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில்,
பஞ்சாபில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்து வரும் ஆபரேஷன் மீது நம்பிக்கை உள்ளது. அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது. இந்த ஆபரேஷன் முடிந்த பிறகு இது பற்றி அறிக்கை வெளியிடப்படும் என்றார்.