தாக்கப்பட்ட தமிழ் இளைஞர் சந்தோஷ் பெங்களூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்!
பெங்களூரு: பெங்களூரில் கும்பல் ஒன்றால் தாக்கப்பட்ட தமிழ் இளைஞர் சந்தோஷ் பெங்களூரிலேயே பிறந்து வளர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.
பெங்களூரு ஸ்ரீராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். கல்லூரி மாணவரான இவரை கிரி நகரில் வைத்து ஒரு கும்பல் சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குல் வீடியோ பல்வேறு கன்னட டிவி சானல்களில் ஒளிபரப்பாகியுள்ளன. தற்போது பெரும் பரபரப்பாக வலம் வரும் இந்த வீடியோவில் தாக்குதலுக்கு ஆளான இளைஞர் சந்தோஷ் தனது பேஸ்புக்கில், காவிரிப் போராட்டம் தொடர்பாக போட்ட பதிவுதான் அவர் தாக்குதலுக்குள்ளாக காரணம் என்று கூறப்படுகிறது.
நடிகர்கள் சிவராஜ் குமார், தர்ஷன் குறித்தும், கன்னட திரையுலகினரின் போராட்டத்தையும், தமிழ் நடிகர்களையும் ஒப்பிட்டு அவர் கருத்து போட்டதால் ஆத்திரமடைந்த கும்பல் சந்தோஷைத் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து சந்தோஷ் தரப்பில் போலீஸில் புகார் தரப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் போலீஸ் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். அதேசமயம், தாக்குதல் குறித்த வீடியோ காட்சிகளை கன்னட சானல்களே ஒளிபரப்பியும் கூட பெங்களூர் போலீஸ் தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லை. அரசுத் தரப்பிலோ அல்லது காவல்துறை தரப்பிலோ எந்த கருத்தும் இதுவரை வெளியாகவில்லை.
பெங்களூரில் பிறந்து வளர்ந்த ஒருவரே இப்படித் தாக்குதலுக்குள்ளாகியிருப்பது அங்கு வசிக்கும் தமிழர்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications