“கவிஞர் மம்தா பானர்ஜி?” - இவருக்கு இந்த விருது கொடுத்தா எனக்கு வேணாம்.. கொந்தளித்த எழுத்தாளர்!
கொல்கத்தா: மம்தா பானர்ஜிக்கு இலக்கிய விருது அறிவிக்கப்பட்டதால், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் தனக்கு வழங்கப்பட்ட விருதை திருப்பி அளிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் கவிதைகளின் தொகுப்பை பாராட்டி, சிறப்பு இலக்கிய விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மம்தாவுக்கு இலக்கிய விருது வழங்கப்பட்டது, எழுத்தாளர் என்ற முறையில் அவமானமாக உள்ளது என வங்க எழுத்தாளர் ரத்னா ரஷீத் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி
தனது 21 வயதில் காங்கிரஸ் கட்சி மூலம் அரசியலில் காலடி எடுத்து வைத்தவர் மம்தா பானர்ஜி. 1998ஆம் ஆண்டு, காங்கிரஸில் இருந்து பிரிந்து திரிணாமுல் காங்கிரஸை தொடங்கிய மம்தா பானர்ஜி, 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் ஆட்சியை அமைத்தார்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்று மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக இருந்து வருகிறார் மம்தா. அரசியல்வாதியாக நன்கு அறியப்பட்ட மம்தா பானர்ஜி, கவிஞர், எழுத்தாளர், ஓவியர் என பன்முகத்திறமை கொண்டவர்.

கவிஞர் மம்தா
கவிஞரான மம்தா பானர்ஜி, தனது உரைகளில் ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்டோரை குறிப்பிட்டு பேசும் வழக்கம் கொண்டவர். மம்தா பானர்ஜி தான் எழுதிய 900 கவிதைகளின் தொகுப்பான 'கபிதா பென்' என்ற நூலை வெளியிட்டுள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தனது ஓவியங்களை விற்பனை செய்து கிடைத்த பல லட்ச ரூபாய் நிதியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரத்திற்காக வழங்கினார் மம்தா.

மம்தாவிற்கு விருது
மேற்கு வங்கத்தில் இலக்கியத்தில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கு பஷ்சிம்பங்க வங்காள அகாடமி, விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இதன் தலைவராக, மே.வங்க கல்வித்துறை அமைச்சர் பிரத்யா பாசு உள்ளார்.
இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எழுதிய 900 கவிதைகள் கொண்ட தொகுப்பான 'கபிதா பென்' நூலை பாராட்டி, சிறப்பு இலக்கிய விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

எழுத்தாளர் எதிர்ப்பு
மம்தா பானர்ஜிக்கு சிறப்பு இலக்கிய விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதற்கு, அம்மாநிலத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் ரத்னா ரஷீத் பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு வழங்கப்பட்ட விருதை திருப்பி தரப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜிக்கு விருது வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரத்யா பாசுவுக்கு எழுதிய கடிதத்தில் ரத்னா ரஷீத் பானர்ஜி, ரவிந்திரநாத் தாகூர் பிறந்த நாளில், மம்தாவுக்கு விருது வழங்கப்பட்டதன் மூலம், எனக்கு முன்னர் வழங்கப்பட்ட விருது முள்கிரீடமாக உறுத்துகிறது எனக் கூறியுள்ளார்.

அரசியலும் இலக்கியமும் வேறு வேறு
மேலும், மம்தாவுக்கு இலக்கியத்திற்கான விருது வழங்கப்பட்டது, எழுத்தாளர் என்ற முறையில் அவமானமாக உள்ளது. இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். அரசியல் களத்தில் மம்தாவின் போராட்டம் பெருமையாக உள்ளது. அவருக்கு மரியாதை அளிக்கிறோம்.
ஆனால், அரசியலுக்கு செய்த பங்களிப்பையும், இலக்கியத்திற்கு செய்த பணியையும் ஒப்பிடக்கூடாது. இந்த விருதை மம்தா ஏற்றிருக்கக்கூடாது." என ரத்னா ரஷீத் பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் மேற்கு வங்கத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications