ஹைதராபாத்: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது ஆட்டோ தலை குப்புற கவிழ்ந்து விபத்து
ஹைதராபாத்: விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது மினி ஆட்டோ தலை குப்புற கவிழ்ந்து பக்தர்கள் 9 பேர் காயமடைந்த சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. ஆட்டோ கவிழும் காட்சிகள் தொலைக்காட்சி கேமராக்களில் பதிவாகியுள்ளன.
ஹைதராபாத்தின் பேகம்பேட்டையில் இருந்து ஹுசைன்சாகர் என்ற பகுதிக்கு விநாயகர் சிலை ஊர்வலம் ஒன்று சென்றது. அதன் பின்னால் பக்தர்கள் சுமார் 12 பேர் ஒரு லோடு ஆட்டோவில் பயணித்தனர். மார்க்கெட் பகுதியிலுள்ள ஒரு வளைவில் ஆட்டோ திரும்பியபோது எதிர்பாராதவிதமாக தலைகுப்புற ஆட்டோ கவிழ்ந்தது.

இதில் ஆட்டோவில் இருந்த அனைவரும் ரோட்டில் வீசியெறியப்பட்டனர். சிலர் மீது ஆட்டோ விழுந்து அமுக்கியது. ஊர்வலம் செல்லும் பாதையில் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டிருந்த போலீசாரும், டிராபிக் போலீசாரும் அடுத்த சில விநாடிகளில் ஓடிச் சென்று ஆட்டோவை தூக்கி உள்ளே சிக்கியவர்களை காப்பாற்றினர்.
எனவே உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. ஆட்டோவில் இருந்த 2 சிறுவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதிக லோடு மற்றும் அதிகப்படியான வேகம் இந்த விபத்துக்கு காரணம் என்று தெரியவந்தது. ஊர்வலத்தை படம் பிடித்துக் கொண்டிருந்த தொலைக்காட்சி நிருபர்கள் வீடியோவில் இக்காட்சிகள் தத்ரூபமாக பதிவாகியுள்ளன.












Click it and Unblock the Notifications