அயோத்தியில் கோயில் ராமருக்கு... அப்ப புதுசா கட்டப் போற மசூதி யாருக்கு அர்ப்பணம் ?
அயோத்தி : அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் கட்டப்பட உள்ள மசூதி, 1857 ல் சுதந்திரத்திற்காக போராடி உயிர்தியாகம் செய்த அஹமத்துல்லா ஷாவிற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளதாக இந்திய இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில், சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி மசூதி கட்டுவதற்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் மசூதி கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
இந்நிலையில், உ..பி., சன்னி வஹ்பு வாரியம் மசூதி கட்டுவதற்காக இந்திய இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த அறக்கட்டளையின் செயலாளர் அதர் ஹூசைன் கூறுகையில், அயோத்தி மசூதியை மிகப்பெரிய விடுதலை போராட்ட வீரரான மவுலவி அஹ்மதுல்லா ஷாவிற்காக அர்ப்பணிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து அறக்கட்டளை தீவிரமாக சிந்தித்து வருகிறது.
இது பற்றி பல்வேறு தரப்பில் இருந்தும் கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன. இது பற்றிய ஆலோசனைக்கு பிறகு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றார். இந்த மசூதிக்கு எந்த முகலாய மன்னரின் பெயரையும் வைக்கக் கூடாது என்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முன்னரே இந்த அறக்கட்டளை அறிவித்திருந்தது.
மசூதிக்கு என்ன பெயர் சூட்டலாம் என பல மாதங்களாக ஆலோசிக்கப்பட்டு, கடைசியாக அஹ்மதுல்லா ஷாவின் பெயர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. அஹமத்துல்லா ஷா, மவுலவி பைசாபாதி எனவும் அழைக்கப்பட்டவர்.
அடுத்த வாரத்தில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகிறது கொரோனா தடுப்பு மருந்து.. கோத்தபய ராஜ்பக்ச
1787 ம் ஆண்டு பிறந்த அஹமத்துல்லா ஷா, 1858 ம் ஆண்டு, ஆங்கிலேய ராணுவத்தால் ஜூன் 5 ம் தேதி கொல்லப்பட்டார். பிரிட்டிஷ் அதிகாரியான ஜார்ஜ் புருசி மாலெசன் என்பவர் தான் எழுதிய, 'History of Indian Mutiny' என்ற புத்தகத்தில் அஹமத்துல்லா ஷாவின் வீரம் மற்றும் நிர்வாகத்திறன் பற்றி குறிப்பிட்டுள்ளார்.