தூள்தூளான எதிர்ப்பு.. அயோத்தி ராமர் கோவில் கருவறைக்கு செல்லும் மோடி! என்ன செய்வார் தெரியுமா?
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி 'முக்கிய யாஜ்மன்' ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் அவர் கும்பாபிஷேக தினத்தில் கோவில் கருவறைக்கு சென்று ராமர் சிலைக்கு சடங்குகள் செய்ய உள்ளதாக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
அயோத்தி.. சுமார் 500 ஆண்டு சர்ச்சைக்கு பெயர் பெற்ற இடம். அயோத்தியை அடிப்படையாக வைத்து இந்தியாவில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இந்த 500 ஆண்டு கால பிரச்சனைக்கு கடந்த 2019ல் உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்தது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தான் அனைத்து பிரச்சனையையும் முடிவுக்கு கொண்டு வந்தது. இதையடுத்து அயோத்தி ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் கூறியது போல் ஸ்ரீராம ஜென்ம தீர்த்த சேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டது. அதன்பிறகு 2020ல் பிரதமர் மோடி ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து பணிகள் தொடங்கி வேகமாக நடந்து வந்தது. இந்நிலையில் தான் தற்போது கோவிலின் முதற்கட்ட பணிகள் என்பது முடிவடைந்துள்ள நிலையில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட 3 ஆயிரத்துக்கும் அதிகமான விவிஐபிக்கள் பங்கேற்க உள்ளனர். கோவில் கும்பாபிஷேகத்துக்கான சிறப்பு பூஜைகள், சடங்குகள் கடந்த 16ம் தேதி தொடங்கியது.
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி 11 நாள் விரதத்தை தொடங்கி உள்ளார். தினமும் இளநீர் மட்டுமே அவர் பருகி வருவதாகவும், அவர் மெத்தையை தவிர்த்து போர்வையை விரித்து படுத்து தூங்குவதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் தினமும் ராம மந்திரங்களை உச்சரித்து வருவதோடு ராமாயணத்தோடு தொடர்புடைய கோவில்களுக்கு பிரதமர் மோடி சென்று வருகிறார். அந்த வகையில் இன்று பிரதமர் மோடி திருச்சி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோவில்களுக்கு செல்ல உள்ளார்.
இதற்கிடையே தான் ஜனவரி 22ல் கும்பாபிஷேக தினத்தில் பிரதமர் மோடி பூஜை, சடங்குகள் செய்ய சங்கராச்சாரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் விழாவை புறக்கணிக்க உள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி கோவில் கருவறைக்கு செல்வாரா? பூஜை, சடங்குகள் செய்வாரா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. இந்த குழப்பத்துக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி பிரதமர் மோடி ஜனவரி 22ம் தேதி நடக்கும் கும்பாபிஷேக விழாவில் ‛முக்கிய யாஜ்மன்' (Mukya Yajman) ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என கோவில் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாஜ்மன் என்பது சமஸ்கிருத வார்த்தையாகும். அதோடு மதம் சார்ந்த விழாக்களில் முன்னின்றி சடங்குகள் செய்யும் நபரை தான் ‛முக்கிய யாஜ்மன்' என அழைப்பார்கள். அதன்படி ஜனவரி 22 கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி தான் முன்னின்றி புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமர் கோவில் சிலைக்கு சடங்குகள் செய்ய உள்ளது உறுதியாகி உள்ளது.

அன்றைய தினம் பிரதமர் மோடி கோவில் கருவறையில் முக்கிய அர்ச்சகருடன் சேர்ந்து ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கான சடங்குகளை செய்வார். அந்த சமயத்தில் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலை வகிப்பார்கள் என கோவில் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த 16ம் தேதி சிறப்பு பூஜை, சடங்குகள் தொடங்கின. இந்த பூஜை, சடங்குகள் வரும் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. நேற்றைய தினம் கருவறையில் 5 வயது நிரம்பிய ராமரின் சிலை நிறுவப்பட்டது. இந்த 6 நாள் சிறப்பு பூஜை, சடங்குகளுக்கு ‛முக்கிய யாஜ்மன்' ஆக டாக்டர் அனில் மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
டாக்டர் அனில் மிஸ்ரா ராமர் கோவில் இயக்கத்துக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். கோவில் அறக்கட்டளையின் மூத்த உறுப்பினர்களில் ஒருவராக உள்ள இவர் 40 ஆண்டுகளாக கரசேவா பணியில் ஈடுபட்டார். அவர் ஹோமியோபதி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவில் படிப்பை முடித்து டாக்டராக இருந்தார். மேலும் உத்தர பிரதேச ஹோமியோபதி வாரியத்தின் பதிவாளராக செயல்பட்டு ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications