அயோத்தி கும்பாபிஷேகம்.. தசாவதாரம்.. ராமருக்கு கீழே நவகிரகங்கள்.. கருடனும் அனுமனும் கவனிச்சீங்களா
சென்னை: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பால ராமர் சிலை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. பால ராமர் அழகே வடிவாக காட்சி அளிக்க அவரது இருபுறமும் அனுமனும் கருடனும் இருக்கின்றனர். திருவாச்சியை சுற்றிலும் தசாவதார உருவங்கள் வடிக்கப்பட்டுள்ள நிலையில் நவகிரகங்களும் ராமருக்கு கீழே சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளன.
அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராம் ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாக பூஜைகள் 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

ராமர் கோயில் கருவறையில் பால ராமர் சிலை கொண்டு வரப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. நவமி திதியில் ராமர் அவதரித்தார். பால ராமரும் நவமி திதி நாளில் அயோத்தி ஆலயத்திற்கு வந்தது சிறப்பு
அயோத்தி ராமர் கோவிலில் கருவறைக்குள் வைப்பதற்காகக் கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்த சிற்பி அருண் யோகி வடிவமைத்த 200 கிலோ எடையிலான பால ராமர் சிலை, லாரி மூலம் 17ஆம் தேதி இரவு அயோத்திக்குக் கொண்டு செல்லப்பட்டது.
18 ஆம் தேதி காலை அந்த சிலை கிரேன் மூலம் கோவில் கருவறையில் வைக்கப்பட்டது. அப்போது வேத மந்திரங்கள் ஒலிக்கப்பட்டன.
இதனிடையே கருவறைக்குள் வைக்கப்பட்ட பால ராமரின் முதல் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 51 இன்ச் கொண்ட சிலையின் முகம் துணியால் மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தான் தற்போது வெளியாகியுள்ளது.
கும்பாபிஷேக தினமான காலை பூஜை முடிந்த பின்னர், பிற்பகல் 12:20 மணிக்கு, மிருகசீரிஷம் நட்சத்திரத்தில், பிரதமர் மோடியால் ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆரத்தி வழங்கப்பட உள்ளது. அதன் பிறகு கோயில் பக்தர்களுக்காகத் திறக்கப்படும். இந்நிலையில், அயோத்தியில் ஸ்ரீ ராமரின் குழந்தை வடிவ சிலையைத் தரிசிக்கப் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
பால ராமரின் சிலையை சுற்றிலும் தசாவதார கோலங்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம்,பரசுராமர், ராமர், கண்ணன், புத்தர், கல்கி என சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. பிரம்மனும் ருத்திரனும் இரண்டு பக்கமும் சிற்பங்களாக செதுக்கப்படுள்ளன. ஒரு பக்கம் அனுமனும் மற்றொரு பக்கம் கருடனும் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.
சங்கு, சக்கரம், தாமரை, கதை, பிரணவம், சுவத்திகம், போன்ற சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. பால ராமரின் சிலைக்கு கீழே நவகிரங்களான சூரியன், புதன், சுக்கிரன், குரு, ராகு கேது, வெள்ளி, சந்திரன், செவ்வாய், சனி போன்றவை இடம் பெற்றுள்ளன. நாளை மறுநாள் 22ஆம் தேதி பிற்பகல் 12 மணிக்கு மேல் பால ராமரின் சிலைக்குப் பூஜை செய்யப்பட்டு, ராமர் சிலையின் கண் திறக்கப்படும். அயோத்தி சென்று பால ராமரை தரிசனம் செய்தாலே மகாவிஷ்ணுவின் தசாவதார கோலத்தையும் நவ கிரகங்களையும், பிரம்மாவையும், சிவனையும் தரிசனம் செய்த பலன் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications