எடியூரப்பா தானாக பதவி விலகவில்லை? விலக சொன்னது கட்சி தலைமைதானாம்... காரணம் இதுதாங்க!
எடியூரப்பா தானாக பதவி விலகவில்லை என்றும் அவரை பதவி விலகுமாறு உத்தரவிட்டதே கட்சி தலைமைதான் என்றும் கூறப்படுகிறது.
Recommended Video
பெங்களூர்: கர்நாடகா முதல்வர் எடியூரப்பா தானாக பதவி விலக முன்வரவில்லையாம். கட்சி தலைமை உத்தரவுக்கிணங்க அவர் பதவி விலகுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் போட்டியிட்ட கட்சிகளை காட்டிலும் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதால் அக்கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். இதற்கு காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
எனினும் கடந்த வியாழக்கிழமை எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். அன்று முதல் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் எம்எல்ஏக்களை பேரம் பேசுவதாக தகவல்கள் வெளியாகின.
ஆடியோ ஆதாரம்
கர்நாடக மாநில சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று மாலை நடத்தப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.100 கோடி தருவதாகவும் சிலருக்கும் அமைச்சர் பதவி தருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
எடியூரப்பா மகன் பேரம்
காங்கிரஸ் எம்.எல்.ஏ. அரபைல் ஹெப்பார் சிவராமின் மனைவிக்கு எடியூரப்பாவின் மகன் போன் செய்து பேரம் பேசியுள்ளார். அப்போது உங்கள் கணவர் எங்களுக்கு ஆதரவளித்தால் ரூ.15 கோடி தருகிறோம் என்று பேரம் பேசியதாக கன்னட டிவி சேனல் வெளியிட்டது.
எடியூரப்பா பேரம்
இந்நிலையில் பாஜக மற்ற கட்சி எம்எல்ஏக்களுடன் பேரம் பேசும் 3-ஆவது வீடியோவும் இன்று வெளியாகியுள்ளது. அதில் காங்கிரஸ் எம்எல்ஏ பிசி பாட்டிலுக்கு எடியூரப்பாவே போன் செய்து தங்களுக்கு ஆதரவு அளித்தால் அமைச்சர் பதவி கொடுப்பதாக உறுதி அளித்தார்.
ராஜினாமா செய்ய முடிவு
நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்குள் எடியூரப்பா ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இன்று காலை வரை நம்பிக்கை வாக்கெடுப்பில் 100 சதவீதம் வெற்றி பெறுவோம் என்று கூறிய எடியூரப்பா தற்போது பின்வாங்கியது ஏன் என்ற கேள்வி எழுந்தது.
கட்சிக்கு அவப்பெயர்
எடியூரப்பாவின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக் கோரி கட்சி தலைமை உத்தரவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. குதிரை பேர ஆதாரங்கள் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டே இருப்பதால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் அவப்பெயர் அதிகரிப்பதால் பாஜக தலைவர்கள் கவலையடைந்ததன் விளைவு எடியூரப்பாவை ராஜினாமா செய்ய உத்தரவிட்டது.