மன அழுத்தம்... தன்னைத் தானே கத்தியால் குத்தி பாலிவுட் நடிகை தற்கொலை!
மும்பை: மன அழுத்தம் காரணமாக பாலிவுட் நடிகை ஷீகா ஜோஷி கத்தியால் தன்னைத் தானே குத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான ‘பி.ஏ. பாஸ்' என்ற படத்தில் முன்னணி நடிகை ஷில்பா சுக்லாவுடன் நடித்தவர், நடிகை ஷீகா ஜோஷி (40). மாடல் அழகியாக இருந்து சினிமா நடிகையாக மாறிய ஷீகா, தொடர்ந்து துணை நடிகையாக நடித்து வந்தார். மும்பை வெர்சோவா பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் தன்னுடைய தோழி ஒருவருடன் வாடகைக்கு வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிய அவரது தோழி, கதவு உட்புறமாக பூட்டியிருக்கவே நீண்ட நேரம் வெளியில் நின்று தட்டியுள்ளார். அப்போது உள்ளேயிருந்து ஷீகா, ‘இதோ வருகிறேன்' எனப் பதிலளித்துள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப் படாததால் பொறுமை இழந்த தோழி தன்னிடமிருந்த சாவி கொண்டு கதவைத் திறந்து உள்ளே சென்றுள்ளார்.
அங்கே, ஷீகா தனது தொடையில் கத்தி குத்திய நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்த தோழி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தனது காரில், ஷீகாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை சோதித்துப் பார்த்த மருத்துவர்கள், ஷீகா ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், ஷீகாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில், மன அழுத்தம் காரணமாக ஷீகா தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த ஷீகாவுக்கு 19 வயதில் மகள் இருக்கிறார். அவர் டெல்லியில் தங்கி படித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications