காஷ்மீரில் தீவிரவாதிகள்- ராணுவத்தினர் இடையே சண்டை.. பொதுமக்கள் 7 பலி!
ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் உள்ளூர்வாசிகள் 7 பேர் பலியானதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் உள்ளூர்வாசிகள் 7 பேர் பலியானதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
புல்வாமா மாவட்டம் சர்னூ கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அப்பகுதியில் ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டனர். இதில், ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து, பதிலடி தாக்குதல் இறங்கினர் ராணுவத்தினர். இந்த துப்பாக்கிச் சண்டையில், 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களில் 7 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர்.
இதனால் அங்கிருக்கும் மக்கள் கடும் கோபத்திற்கு உள்ளானார்கள்.இந்நிலையில், புல்வாமா என்கவுண்டரில் உள்ளுர் பொதுமக்கள் பலியானதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரிவினைவாதிகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் வாகனங்கள் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.போராட்டம் காரணமாக மொபைல் இண்டர்நெட் சேவை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பதற்றமான நிலை நிலவி வருகிறது.