பெங்களூர் ஏடிஎம் மையத்தில் பெண்ணை தாக்கிய நபர் விற்ற செல்போனை வாங்கியவர் கைது
பெங்களூர்: ஏ.டி.எம். மையத்தில் 38 வயது பெண் வங்கி அதிகாரியை தாக்கிய நபரிடம் இருந்து அந்த பெண்ணின் செல்போனை விலைக்கு வாங்கியவர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரில் உள்ள தனியார் வங்கி கிளையில் மேலாளராக இருக்கும் ஜோதி உதய்குமார்(38) நேற்று முன்தினம் காலை மாநகராட்சி அலுவலகம் அருகே இருக்கும் எல்.ஐ.சி. கட்டிடத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கச் சென்றார். காவலாளி இல்லாத அந்த ஏ.டி.எம். மையத்தில் அவர் பணம் எடுத்ததும் மர்ம நபர் உள்ளே புகுந்து அவரை துப்பாக்கி மற்றும் அரிவாளை காட்டி மிரட்டினார். மேலும் அவரின் தலையில் அரிவாளால் பல முறை தாக்கிவிட்டு பணம், செல்போன் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார்.
இந்த தாக்குதலில் தலையில் படுகாயம் அடைந்த ஜோதி கெங்கேரியில் உள்ள பிஜிஎஸ் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்த அந்த மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர். அந்த நபரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நகர போலீஸ் கமிஷனர் ராகவேந்திரா ஹெச். ஆவ்ராத்கர் மற்றும் கூடுதல் கமிஷனர் பிரனாப் மொஹந்தி ஆகியோர் நேற்று ஜோதியை மருத்துவமனையில் சந்தித்து குற்றவாளி நிச்சயம் தண்டிக்கப்படுவான் என்று அவரிடம் உறுதி அளித்தனர். அந்த நபர் அவரை திரும்பத் திரும்ப தலையில் தாக்கியதில் ஜோதியின் வலது பக்க உடல் செயல் இழந்துவிட்டது.
இந்நிலையில் அந்த மர்ம நபரிடம் இருந்து ஜோதியின் செல்போனை விலைக்கு வாங்கிய நபர் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள இந்துபூரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மர்ம நபர் குறித்த விவரங்களை போலீசார் கேட்டு வருகின்றனர். விரைவில் அந்த மர்ம ஆசாமி சிக்குவார் என்று போலீசார் நம்புகிறார்கள்.
இதற்கிடையே காவலாளி இல்லாத அனைத்து ஏ.டி.எம். மையங்களுக்கும் உடனே காவலாளியை பணியமர்த்த வேண்டும் இல்லை என்றால் ஒருவரை நியமிக்கும் வரை மையங்களை மூட வேண்டும் என்று கர்நாடக அரசு அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications