கேவலம் ஒரு செல்போனுக்காக இளைஞரைப் போட்டுத்தள்ளிய கும்பல் – பெண் உட்பட 3 பேர் கைது
பெங்களூரு: ஓசூரில் விலை உயர்ந்த செல்போனுக்காக இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இளம்பெண் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒசூர் அருகிலுள்ள பஸ்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் கடந்த 16 ஆம் தேதி 30 வயது மதிக்கத்தக்க வட மாநில இளைஞர் ஒருவர் படுகாயத்துடன் கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த அட்கோ போலீஸார் அந்த இளைஞரை மீட்டு, ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர், அங்கிருந்து உயர் மருத்துவச் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, அங்கு அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து அட்கோ போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொலை செய்யப்பட்ட இளைஞர் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹேமந்த் என்பதும், இவர் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற்ச்சாலையில் பணிபுரிந்ததும் தெரிய வந்தது.
இக்கொலை வழக்குத் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீஸார், ஒசூர் அருகே உள்ள புனகன்தொட்டியைச் சேர்ந்த அஞ்சலி, ஒசூர் பார்வதிநகர் ராஜா, கர்நாடக மாநிலம், அத்திப்பள்ளி அருண்குமார் ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர்.
இவர்கள் மூவரும் ஓசூர் மற்றும் சுற்றுப்பகுதியில் தனியாக செல்லும் இளைஞர்களிடம் அஞ்சலியை காட்டி ஆசை வார்த்தை கூறிப் பணம், பொருள்களைப் பறிக்கும் கும்பலைச் சேர்ந்தவர்கள்.
கடந்த 15 ஆம் தேதி இரவு ஒசூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஹேமந்தை சந்தித்து, அவரிடம் இருந்த பணம் விலை உயர்ந்த செல்போனைப் பறிக்க திட்ட மிட்ட அஞ்சலி ஹேமந்தை பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு நால்வரும் சேர்ந்து மது அருந்தியதும் போதை தலைக்கேறிய ஹேமந்த்தை மூவரும் சேர்ந்து கட்டை மற்றும் கல்லால் தாக்கிவிட்டு அவர் வைத்திருந்த செல்போன் மற்றும் பணத்தை எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மூவரையும் ஒசூர் இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை சேலம் சிறையில் அடைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications