ஒடிசாவில் காமாக்யா ரயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து! ஒருவர் பலி, பலர் படுகாயம்
புவனேஷ்வர்: பெங்களூரில் இருந்து கவுஹாத்திக்கு சென்ற காமாக்யா ரயில் ஒடிசாவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. மொத்தம் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்தில் சிக்கிய நிலையில், மீட்புப் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ரயில் விபத்துகள் என்பது தொடர்கதையாகி வருகிறது. ரயில் விபத்துகளைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் கூட அதையும் தாண்டி ரயில் விபத்துகள் தொடர்கதையாகவே இருந்து வருகிறது. இப்போது மீண்டும் அப்படியொரு விபத்து தான் ஒடிசாவில் நடந்துள்ளது.

ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் காமாக்யா விரைவு ரயில் விபத்தில் சிக்கியுள்ளது. பெங்களூரில் இருந்து கவுஹாத்திக்கு சென்ற காமாக்யா விரைவு ரயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், ரயில்வே துறை உயிரிழப்பை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. மேலும், 25 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே இந்த ரயில் விபத்தால் கட்டாக் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 3 ரயில்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளது. இந்த பாதையில் மீண்டும் ரயில் சேவையைத் தொடங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் ஒடிசா தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மங்குலி அருகே நிர்குண்டியில் காலை 11.54 மணிக்கு இந்த ரயில் விபத்தில் சிக்கியுள்ளது. ரயில் பெங்களூருவிலிருந்து அசாமின் கவுஹாத்தியில் உள்ள காமாக்யா நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தோர் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ஒடிசா தீயணைப்பு சேவை இயக்குநர் ஜெனரல் சுதான்சு சாரங்கி தெரிவித்தார்.
இது தொடர்பாகக் கிழக்கு ரயில்வேயின் செய்தி தொடர்பாளர் அசோக குமார் மிஸ்ரா கூறுகையில், "12551 காமாக்யா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸின் சில பெட்டிகள் தடம் புரண்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. தற்போது வரை 11 ஏசி பெட்டிகள் தடம் புரண்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர்.
மருத்துவர்களும், மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். ரயில்வே துறையினர் மூத்த அதிகாரிகள் விரைவில் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இப்போது காயமடைந்தோர் மீட்கும் பணிகளும் ரயில் பாதையைச் சீரமைத்து மீண்டும் அங்கு ரயில் சேவையைத் தொடங்குவதும் தான் எங்கள் முதல் முன்னுரிமை. பிறகு ரயில் விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications