பெங்களூர் போலீஸ் நடத்திய 'ஆபரேசன் ஸ்மைல்': பிச்சையெடுக்க வைக்கப்பட்ட 190 குழந்தைகள் மீட்பு
பெங்களூர்: பெங்களூரில் பிச்சைக்காரர்களை மீட்க குறிவைத்து நடந்த ஸ்மைல் ஆபரேசனில் ஒரே நாளில் 190 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.
சாலையோர சிக்னல்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்போர் எண்ணிக்கை பெங்களூரில் அதிகரித்து வந்தது. இதற்காக கடத்திவரப்பட்ட குழந்தைகளை பயன்படுத்துவதும் உண்டு என்று தெரிகிறது. குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதற்காகவே, அரசு மகப்பேறு மருத்துவமனைகளில் இருந்து, குழந்தைகளை கடத்துவது பெங்களூரில் அதிகரித்தது.

குழந்தைகள் நலனுக்காகவும், குழந்தைகள் கடத்தலை தடுப்பதற்காகவும், பிச்சைக்காரர்களை பிடித்து மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்க காவல்துறை திட்டமிட்டது. பெங்களூர் நகர கூடுதல் போலீஸ் கமிஷனர் (கிழக்கு மண்டலம்) பி.ஹரிசேகரன் தலைமையில், 'ஆபரேசன் ஸ்மைல்' என்ற பெயரில், நேற்று போலீசார் நகரம் முழுவதிலும் வேட்டை நடத்தினர்.
நேற்று ஒரே நாளில் 25 பச்சிளம் குழந்தைகள் உட்பட 190 சிறுவர், சிறுமிகள் மீட்கப்பட்டனர். மாநில அரசின் பால மந்திராக்களுக்கும், தொண்டு நிறுவனங்கள் நடத்தும் மறுவாழ்வு மையங்களுக்கும் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். சிறுவர்களை, குழந்தைகளை பிச்சையெடுக்க வைத்ததற்காக, 65 பெண்கள் மற்றும் 8 ஆண்களை போலீசார் கைது செய்தனர்.
மால்கள், கோயில்கள், ரயில்வே நிலையங்கள், பஸ் நிலையங்கள், தியேட்டர்கள், சிக்னல்களில் இந்த ஆபரேசன் அதிரடியாக நடத்தப்பட்டது. "குழந்தைகளை கடத்துவது, உடல்ரீதியாக அவர்களை துன்புறுத்துவது போன்றவற்றில் பிச்சை எடுக்கும் கும்பல் ஈடுபடுகிறது என்று தகவல் கிடைத்துவருகிறது. சிலர் நாள் ஒன்றுக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை பணம் கொடுத்து, குழந்தைகளை வாடகைக்கு கூட்டிச் சென்று பிச்சை எடுப்பதாகவும் கூறப்படுகிறது" என்றார் கூடுதல் கமிஷனர் ஹரிசேகரன்.
"குழந்தைகள் மற்றும் அவர்களை பிச்சைக்கு பயன்படுத்தியவர்களின் டி.என்.ஏக்கள் சோதித்து பார்க்கப்படும். இரண்டுமே பொருந்திப்போனால், பெற்றோரும், குழந்தையும், குழந்தைகள் நல கமிட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். டி.என்.ஏ பொருந்தாவிட்டால், குழந்தைகளை கடத்தியது, பிச்சை எடுக்க வைத்தது உள்ளிட்ட பல பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் தள்ளப்படுவார்கள்" என்று ஹரிசேகரன் தெரிவித்தார்.
இதேபோல ஜூலை மாதம், தெலுங்கானா மாநிலத்தில், அம்மாநில போலீசாரால் 2474 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications