முதியோரை மிதிப்பதில் பெங்களூர் முதலிடம், மதிப்பதில் டெல்லி டாப்!

இதுதொடர்பாக 'ஹெல்ப்ஏஜ்' என்ற அமைப்பு பெருநகரங்களான மும்பை, கொல்கத்தா, டெல்லி, சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய 6 நகரங்களில் ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவில் வெளியாகியுள்ள அம்சங்கள் வருமாறு: பெங்களூரில் வசிக்கும் முதியோரில் 75 சதவீதத்தினர், தங்களது சொந்த மகன்களாலும், மருமகள்களாலும் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதே நேரம் டெல்லியில் 22 சதவீதம்பேர்தான் இதுபோல கூறியுள்ளனர்.
இரண்டாம் கட்ட நகரங்களில் அந்த அமைப்பு நடத்திய ஆய்வில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் 85 சதவீதம் மக்கள் தங்களது பிள்ளைகள் தங்களை நன்றாக கவனித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளனர். ஆனால் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இது வெறும் 13 சதவீதமாக உள்ளது. குடும்பத்தாரால் பாதிக்கப்பட்டதாக கூறும், முதியோரில் 59 சதவீதம் பேர் தங்களது மகன்களாலும், 61 சதவீதம் பேர் தங்கள் மருமகள்களாகவும், மரியாதை குறைவாக நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
விரும்பத்தகாத பேச்சுக்களை 41 சதவீதம் முதியோர் கேட்க வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாகியுள்ளதாகவும், 29 சதவீதம் பேர் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். குடும்ப கவுரவம் பாதித்துவிடும் என்பதால் தனக்கு நேரும் கொடுமையை வெளியே சொல்லாமல் மறைத்துவிடுவதாக 41 சதவீத முதியோர் கூறியுள்ளனர்.
பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் ராகவேந்திர அவுராத்கரிடம் இதுகுறித்து கேட்கும்போது, ஆய்வறிக்கையை பார்த்து அவர் தனது அதிர்ச்சியை தெரிவித்தார். முதியோர் தங்களுக்கு நிகழும் கொடுமைகள் குறித்து உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications