ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வழக்கறிஞர்களை சஸ்பெண்ட் செய்யலாம் - பார் கவுன்சில் வலியுறுத்தல்
சென்னை: உயர் நீதிமன்றம் அறிவித்த புதிய விதிகளை ஏற்க மறுத்து, இடையூறு விளைவிக்கும் வழக்கறிஞர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்யலாம் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு இந்திய பார் கவுன்சில் கடிதம் எழுதியுள்ளது.
ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வழக்கறிஞர்கள் மீது உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களே நடவடிக்கை எடுக்கும் வகையில் வழக்கறிஞர் சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு அமலுக்கும் வந்துள்ளது. இதற்கு, கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் சென்னையில் கடந்த 6 ஆம் தேதி பேரணி நடத்தினர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு இந்திய பார் கவுன்சில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, வழக்கறிஞர்களுக்கான சட்ட விதிகளில் சில திருத்தங்களை கொண்டு வந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் சட்டத் திருத்தம் தொடர்பாக வழக்கறிஞர்கள் தங்களின் கருத்துகளை தலைமை நீதிபதியிடம் முறைப்படி தெரிவிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் சில வழக்கறிஞர்கள், சட்ட திருத்த விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சங்கங்கள் மூலமாக போராட்டங்களை நடத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று இந்திய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கலாம் என்றும், தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு அறிவுறுத்தியுள்ளது. வழக்கறிஞர்கள் நீதித்துறை சார்ந்த பணிகளை விடுத்து, வேறுவிதமான தேவையற்ற இடையூறுகளை விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது நீதிமன்றமே நேரடியாக நடவடிக்கை எடுககும் வகையில் புதிய சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.