அப்சல் குரு ஆதரவு சர்ச்சை.. எனது மகள் தேச விரோதியா... டி.ராஜா கொந்தளிப்பு!
டெல்லி: தேச விரோத செயலில் தனது மகள் ஈடுபடவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர், டி.ராஜா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கில் இடப்பட்ட அப்சல் குரு உள்ளிட்ட தீவிரவாதிகளின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

ஜேஎன்யூ நிர்வாகத்தின் எதிர்ப்பை மீறி மாணவர்களில் ஒரு பிரிவினர் நடத்திய இதில் இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானை ஆதரித்தும் கோஷங்கள் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதற்கு பாஜவின் மாணவரணியான ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் மாணவர் சங்கத் தலைவர் கன்ன்யா குமார் மற்றும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான கனன்யா குமார், இ.கம்யூனிஸ்ட் மாணவரணியைச் சேர்ந்தவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.ராஜாவின் மகளும் இந்த பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார். இந்நிலையில், தமது மகளை சுட்டு கொன்றுவிடுவோம் எனக் கூறி தமக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்ததாக ராஜா கூறியிருந்தார்.
மேலும் அவர் கூறுகையில், பிறரைவிட எனது மகளை பற்றி எனக்கு தெரியும். எனது மகள், அகில இந்திய மாணவர் கூட்டமைப்பின் தலைவராக உள்ளார். அந்த அமைப்பின் வரலாற்றை எடுத்து பார்த்தால், அதன் கொள்கைகள், கோட்பாடுகள் எப்படிப்பட்டவை என்பதை யாவரும் அறிந்துகொள்ளலாம்.
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பிரச்சினையை வைத்து பாஜக குளிர்காய நினைக்கிறது. பல்கலைக்கழகத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் போய் சோதனை நடத்த டெல்லி போலீசாருக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. புகழ் வாய்ந்த பல்கலைக்கழகத்திற்குள் போலீசார் சென்று சோதனையிடுவது சரியில்லை. இவ்வாறு டி.ராஜா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications