உ.பி.யில் தீபாவளி பரிசு பார்சல் வெடித்து சிதறல்.. இரு சிறுமிகள் படுகாயம்
மீரட்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீரட் அருகே தீபாவளி பரிசு பார்சலை பிரித்த போது பேட்டரி வெடித்ததில் இரு சிறுமிகள் காயமடைந்தனர்.
மீரட் அருகில் உள்ளது பிலானோ கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் மெஹாகர் சிங். இவர் மீரட்டில் உள்ள ஒரு கிரிக்கெட் பேட் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு நிதி (13), ராதிகா (11) என்ற இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் தங்கள் வீட்டின் முன்பு கலர் பேப்பர்களால் சுற்றப்பட்ட தீபாவளி பரிசு பார்சலை கண்டனர்.
இதையடுத்து அந்த பார்சலை வீட்டிற்குள் எடுத்து வந்து பிரித்தனர். அப்போது அந்த பார்சலில் இருந்து திடீரென பயங்கர சப்தத்துடன் ஏதோ ஒரு பொருள் வெடித்தது.
இதில் இரு சிறுமிகளும் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு 50 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து புகார் ஏதும் அளிக்கப்படவில்லை. அந்த பார்சலில் என்ன இருந்தது என்பது குறித்து தடயவியல் நிபுணர்கள் விசாரணை நடத்தினர். இதில் 2 மொபைல் பேட்டரிகள், ஒரு செப்பு கம்பி ஆகியன இருந்ததாகவும் மண்ணெண்ணெய் வாசம் இருந்ததாகவும் தெரிகிறது.
ஒரு கிலோவுக்கும் குறைவாக இருந்ததாக சிறுமிகள் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் சிறுமிகளின் தாய்க்கும் பங்கிருக்கலாம் என தெரிகிறது. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.