சீமாந்திராவில் காங்கிரஸ் தோற்க பவன் கல்யாண் காரணமில்லை: சொல்வது அண்ணன் சிரஞ்சீவி
திருப்பதி: சீமாந்திரா மாநில தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைய பவன் கல்யாண் காரணமில்லை என்று சிரஞ்சீவியும், அவரின் பிரச்சாரம்தான் வெற்றிக்கு காரணம் என்று மோடியும் தெரிவித்துள்ளனர்.
சீமாந்திராவிலுள்ள 25 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 175 சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. மேலும் பெரும்பான்மையான காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

ஆந்திர மாநிலத்தை பிரித்ததால் கோபம் அடைந்த மக்கள் காங்கிரசை தோற்கடித்துவிட்டதாக கூறப்படுகிறது. ஜனசேனா என்ற புதிய கட்சியை தொடங்கி காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்த முன்னாள் மத்திய அமைச்சர் சீரஞ்சிவியின் தம்பி நடிகர் பவன்கல்யாணின் பிரச்சாரமும் மோடியின் அலையும் காங்கிரசை மண்ணை கவ்வ செய்துவிட்டதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
இந்நிலையில் காங்கிரஸ் தோல்வி குறித்து ஆராய சீமாந்திரா மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் ரகுவீரா ரெட்டி தலைமையில் ஹைதராபாத்தில் நடந்தது. இதில் காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட சீரஞ்சிவியும் கலந்து கொண்டார். கூட்டமுடிவில் சிரஞ்சீவியை சந்தித்த நிருபர்கள் ‘உங்கள் தம்பி பிரசாரத்தால்தான் காங்கிரஸ் தோற்றதாக கூறப்படுகிறதே' என்று கேள்வி எழுப்பினர். இதற்கு சீரஞ்சிவி பதில் கூறுகையில் "காங்கிரஸ் தோல்விக்கு பல காரணங்கள் உள்ளன. பவன் கல்யாண் பிரச்சாரத்தால் மட்டும் காங்கிரஸ் தோற்கவில்லை. நாடு முழுவதும் காங்கிரஸ் வெற்றியை இழந்துள்ளது. மாநில பிரிவினையை சீமாந்திரா மக்கள் விரும்பவில்லை. எனது தனிப்பட்ட ஆதரவு கூட ஒருங்கிணைந்த ஆந்திராவுக்குதான் இருந்தது. ஆனால் கட்சி மேலிட முடிவை ஏற்க வேண்டிய நிலையில் இருந்தோம்" என்று சிரஞ்சீவி கூறினார்.
இதனிடையே டுவிட்டர் வலைத்தளத்தில் பிரதமர் பதவியேற்க உள்ள நரேந்திரமோடி கூறுகையில், பவன் கல்யாண்ஜியின் தீவிர பிரச்சாரத்திற்காக நான் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications