லோதா கமிட்டி பரிந்துரைகளை ஏற்க மறுக்கும் பிசிசிஐ.. சீராய்வு மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்
டெல்லி: லோதா குழு உத்தரவை அமல்படுத்த கோரும் உத்தரவை மறு சீராய்வு செய்ய கோரி பிசிசிஐ தரப்பில், தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ) நிர்வாகத்தில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து, சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான கமிட்டியின் சிபாரிசுகளை இந்திய கிரிக்கெட் வாரியம் அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனை எதிர்த்து லோதா கமிட்டி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, "சில மாநில சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், லோதா குழு உத்தரவை அமல்படுத்துவதற்கு கால அவகாசம் வேண்டும்.." என்று பிசிசிஐ கோரியது. இதையடுத்து தீர்ப்பை ஒரு வாரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இதற்கிடையே, லோதா குழு உத்தரவை அமல்படுத்த கோரும் உத்தரவை மறு சீராய்வு செய்ய கோரி பிசிசிஐ தரப்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் லோதா கமிட்டி பரிந்துரைகளை ஏற்றேயாக வேண்டிய கட்டாயம் பிசிசிஐக்கு வந்துள்ளது.