மாட்டிறைச்சி விவகாரத்தால் பதற்றம்... வதந்தி பரவாமல் இருக்க காஷ்மீரில் இணையசேவை முடக்கம்
ஸ்ரீநகர்: மாட்டிறைச்சி விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில் வதந்திகள் எதுவும் பரவாமல் இருக்க ஜம்மு காஷ்மீரில் இணையசேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் மாட்டிறைச்சி விற்பனைக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதை விசாரித்த உச்சநீதிமன்றம், மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதித்து நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்திருக்கின்றனர். அதனால் மாட்டிறைச்சி விற்பனைக்கான தடை உத்தரவை 2 மாத காலம் நிறுத்தி வைக்க வேண்டும். மேலும் 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இது தொடர்பான வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் சுயேட்சை எம்.எல்.ஏ. ரஷீத் மாட்டிறைச்சி விருந்து ஒன்றை நடத்தினார். இந்த விவகாரம் அம்மாநில சட்டசபையில் இன்று எதிரொலித்தது.
அப்போது ரஷீத்தை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சூழ்ந்து கொண்டு தாக்கினர். இதனால் அம்மாநில சட்டசபையே போர்க்களமானது. இதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த மாட்டிறைச்சி விவகாரத்தை முன்வைத்து வீண் வதந்திகள் கிளம்பி வன்முறை சம்பவங்கள் நிகழாத வகையில் ஜம்மு காஷ்மீர் முழுவதும் உடனடியாக இணையசேவைகள் முடக்கப்பட்டன. வன்முறை சம்பவங்கள் நிகழவில்லை என உறுதியாகும் வரை இணைய சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் என அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications