நான் தலித்தாக இருப்பதால் என் மீது நடவடிக்கை - நீதிபதி கர்ணன் குற்றச்சாட்டு
தலித் என்பதால் தனக்கு நெருக்கடி தரப்படுவதாக நீதிபதி கர்ணன் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா: தலித் ஆக இருப்பதால் தன் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், தனக்கு நெருக்கடிகள் அளிக்கப்படுவதாகவும் நீதிபதி கர்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் சி.எஸ்.கர்ணன். இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவை வழக்காக எடுத்து, அதற்கு தடை விதித்தார் கர்ணன்.
இப்பிரச்சினை உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதும், கர்ணன் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு, அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.
இதனை எதிர்த்து அவர் பிரதமர் அலுவலகம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு புகார் மனுக்களை அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை எழுப்பிய நீதிபதி கர்ணன், ஊழல் குற்றச்சாட்டு பற்றி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். தான் ஒரு தலித் என்பதால் நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல் தன்னை அவமரியாதை செய்வதாகவும், ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார்.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் ஏற்கனவே இரண்டு முறை ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் நீதிபதி கர்ணன் ஆஜராகவில்லை.
முன்னதாக நீதிபதி சி.எஸ். கர்ணனுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கடந்த பிப்ரவரி 13ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து விசாரணையை மார்ச் மாதம் 10ஆம் தேதியான இன்றைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. இன்றும் நீதிபதி கர்ணன் ஆஜராகவில்லை.
அப்போது தலைமைநீதிபதி ஜே.எஸ்.கவுர் தலைமையிலான 7 பேர் அமர்வு, நீதிபதி கர்ணனுக்கு ஜாமீனில் வெளிவரக் கூடிய பிடிவாரண்ட் பிறப்பிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இதனையடுத்து கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி கர்ணன், தனது புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார். நீதிபதிகள் பற்றி அளித்த புகாருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். இது தொடர்பாக குடியரசுத்தலைவருக்கு புகார் அளிக்கப் போவதாகவும் கூறினார்.
தான் தலித் என்பதால் தனக்கு நெருக்கடி அளிப்பதாக குற்றம் சாட்டிய கர்ணன், உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடையாணை பிறப்பிப்பேன் என்றும் அதிரடியாக தெரிவித்தார்.