கன்னியாஸ்திரி பலாத்காரம்- உரிய விசாரணைக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
நாடியா: மேற்கு வங்காளத்தில் கன்னியாஸ்திரி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தில் ஒரு கிறிஸ்தவ பள்ளிக்கூடத்தில் 71 வயதான மூத்த கன்னியாஸ்திரி, 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார்.
அவர் ரானாகாட் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக விசாரணைக்கு 10 பேர் கைது செய்யப்பட்டு இருந்தாலும், இதுவரையில் முக்கியமான குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.
போலீசார் குற்றவாளிகள் புகைப்படம் அடங்கிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். குற்றவாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர். வெளி மாநிலங்களுக்கும் தனிப்படை அனுப்பப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கராம் செய்யப்பட்டது தொடர்பாக அறிக்கை அளிக்க கோரி மேற்கு வங்காள அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மேற்கு வங்காளம் மாநிலம் தலைமை செய்லாளர், போலீஸ் ஜெனரலுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் 2 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேற்கு வங்காள மாநில சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.