பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் ஒரு தீவிரவாதி கைது: வெடிகுண்டுகள் பறிமுதல்
பெங்களூர்: பெங்களூரில் உள்ள சர்ச் தெருவில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய மேலும் ஒரு தீவிரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி இரவு 8.30 மணிக்கு பெங்களூரில் உள்ள சர்ச் தெருவில் இருக்கும் உணவகம் முன்பு குண்டு வெடித்தது. இதில் சென்னையைச் சேர்ந்த பவானி(37) பலியானார். விடுமுறையை கழிக்க பெங்களூர் வந்த இடத்தில் அவர் பலியானார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கர்நாடக போலீசார் கடந்த 8ம் தேதி இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து வெடிகுண்டு தயாரிக்கத் தேவைப்படும் பொருட்கள், செல்போன்கள், லேப்டாப்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த 3 பேரிடம் நடத்திய விசாரணையில் போலீசாருக்கு நான்காவது தீவிரவாதி பற்றி தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் நேற்று இரவு மங்களூரில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த ஒருவரை கைது செய்தனர். அவர் வைத்திருந்த வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சர்ச் தெரு குண்டுவெடிப்பு வழக்கில் நேற்றைய கைதோடு சேர்த்து மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications