பெங்களூர்வாசிகளுக்கு இலவச காஸ் ஸ்டவ்... வழங்குவது மாநகராட்சி!
பெங்களூரு: தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு காஸ் ஸ்டவ் இலவசமாக அளிக்கிறது பெங்களூரு மாநகராட்சி.
பெங்களூருவில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, மாநகராட்சியின் சமூக நலன் கமிட்டியின் தலைவர் ஸ்ரீநிவாஸ் இதுகுறித்து கூறியதாவது:

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மத சிறுபான்மையினர் ஆகியோரின் வீடுகளுக்கு இலவசமாக காஸ் இணைப்பு, காஸ் ஸ்டவ் வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு வார்டிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு இந்த நல உதவிகள் அளிக்கப்படும்.
அந்த 50 பேரில், 25 பேர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினராகவும் (எஸ்சி/எஸ்டி), மீதமுள்ள 25 பேர், பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் மற்றும் சிறுபான்மையினராகவும் இருப்பார்கள்.
இதேபோல, துணி துவைக்கும் ஜாதி பிரிவினருக்கு வார்டுக்கு தலா 50 இஸ்திரி பெட்டிகள் மற்றும் பெட்ஷீட்டுகள் இலவசமாக வழங்கப்படும். நாவிதர் சமூகத்தினருக்கு, சலூன் உபகரணங்கள் இலவசமாக தரப்படும்.
குடிசைபகுதிகளில் வசிப்போருக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி பொருத்தித்தரப்படும். இந்த திட்டத்தில் பலனடைய விரும்புவோர், நாளை (செவ்வாய்க்கிழமை) முதல், விண்ணப்பங்களை அனுப்பலாம். இரு வாரங்களில் விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு பலனாளிகளுக்கு பொருட்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பெங்களூரு மாநகராட்சிக்கு இவ்வாண்டு தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, மாநகராட்சியை ஆளும் பாஜக இலவச திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications