மீட்டருக்கு மேல் ரூ.30 தராத பெண் பயணிக்கு மூனு குத்து.. பெங்களூரு ஆட்டோ டிரைவர் அடாவடி
பெங்களூரு: மீட்டருக்கு மேல், ரூ.30 தராததால், தனியார் நிறுவன பெண் ஊழியர் ஆட்டோ டிரைவரால் தாக்கப்பட்ட சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை ஒப்பிட்டால், பெங்களூருவில் ஆட்டோ கட்டணம் நியாயமானதாக இருக்கும், ஆட்டோ டிரைவர்கள் அதிகம் காசு கேட்கமாட்டார்கள் என்ற ஒரு கருத்தாக்கம் உள்ள நிலையில், மீட்டருக்கு மேல் பணம் கேட்டு பெண் பயணியை ஆட்டோ டிரைவர் அடித்துள்ளது பெங்களூருவாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தனியார் நிறுவன பெண் ஊழியர் ஒருவர் சம்பவத்தன்று, ரிஸ்வான் பாஷா என்பவரின் ஆட்டோவில் பயணித்துள்ளார். ஆட்டோவை கிளப்பியபோது, மீட்டருக்கு மேல் ரூ.30 பணம் தர வேண்டும் என்று கண்டிஷன் போட்டுள்ளார் ரிஸ்வான் பாஷா. ஆனால், அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் சிறிது தூரம் சென்றதும் ஆட்டோவை நிறுத்திய ரிஸ்வான் பாஷா, பெண் என்றும் பாராமல், இடுப்பில் கையை போட்டு வெளியே இழுத்து தள்ளியுள்ளார். இதையடுத்து சம்பவம் குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தெரிவித்துள்ளார் அந்த பெண். இதை பார்த்த ரிஸ்வான் மேலும் கோபமடைந்து, அந்த பெண்ணை அடித்ததாக கூறப்படுகிறது. சுமார் மூன்று முறை, அவரது கைகளில் ஓங்கி அடித்துள்ளார் ரிஸ்வான்.
அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துள்ளனர். யாரும் உதவவில்லை. இதனிடையே, கட்டுப்பாட்டு அறையில் இருந்து திரும்ப போன் செய்த போலீசார், நீங்கள் கூப்பிடும் இடத்துக்கு வர முடியாது. நீங்களே காவல் நிலையம் வந்து புகார் அளியுங்கள் என்று கூறிவிட்டனராம்.
சம்மந்தப்பட்ட டிரைவர், ஓலா நிறுவனத்தில் தனது ஆட்டோவை இணைத்துக் கொண்டுள்ளார். எனவே சம்பவம் குறித்து ஓலா நிறுவனத்து பேஸ்புக்கில், பாதிக்கப்பட்ட பெண் விவரமாக தெரிவித்துள்ளார். இதையடுத்து உடனடியாக தனது நிறுவனத்துடனான ரிஸ்வான் பாஷாவின் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டது ஓலா.
இதுகுறித்து ஓலா நிறுவன தரப்பு கூறுகையில், "சம்பவம் நடந்தபோது, ரிஸ்வான் பாஷா நாங்கள் பணித்த பணியில் கிடையாது. அவர் சுயமாக, அந்த பெண்ணை அழைத்துச் சென்றார். இருப்பினும், எங்கள் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உடனடியாக ரிஸ்வான் பாஷாவை விலக்கிவிட்டோம். எங்களிடம், டிரைவர்கள் குறித்த முழு விவரமும் பராமரிக்கப்பட்டுவருகிறது" என்று கூறியுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் இதுவவரை காவல் நிலையத்தில் முறைப்படி புகார்தரவில்லை.












Click it and Unblock the Notifications