பெங்களூரில் ஒரே நாளில் கொட்டிய 14 செ.மீ மழை.. ரோடு முழுக்க வெள்ளமோ வெள்ளம்
பெங்களூரில் ஒரே நாளில் கொட்டிய 14 செ.மீ மழை.. ரோடு முழுக்க வெள்ளமோ வெள்ளம்
பெங்களூர்: பெங்களூரில் கடந்த சில நாட்களாகவே மாலை நேரத்தில் பலத்த மழை கொட்டி வருகிறது. அதிலும் நேற்று ஒரே நாளில் 14.1 செ.மீ மழை பெய்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தினமும் மாலை நேரங்களில் பெங்களூரின் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.
அதிலும் நேற்று பிற்பகல் முதலே நல்ல மழை கொட்டியது. இதனால் வீக் என்ட் அவுட்டிங் செல்வோர் பாதிக்கப்பட்டனர்.
மழை வெள்ளம்
மேலும் பல இடங்களிலும் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அவதிப்பட்டனர். ஹெப்பால், அல்சூர் உள்ளிட்ட பல இடங்களிலும் வீக் என்ட் என்ற போதிலும் மழையால் டிராபிக் நெரிசல் ஏற்பட்டது. இன்று காலையிலும் ஹெப்பால் பகுதியில் சாலையில் தேங்கியிருந்த நீரை அகற்றும் பணிகள் நடைபெற்றன.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, பெங்களூர் மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் சீனிவாச ரெட்டி தெரிவித்துள்ளார்.
தென் கர்நாடகா
மைசூர், சாம்ராஜ்நகர் ஆகிய தெற்கு கர்நாடக மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன மழை
இன்று காலை 8.30 மணி வரையிலான நிலவரப்படி, பெங்களூரில் அதிகபட்சமாக 14.1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கடந்த வருடம் ஆகஸ்ட் 15ம் தேதி ஒரே நாளில் 18 செ.மீ மழை பெங்களூரில் பெய்தது. அந்த நகரத்தில், ஒரு நூற்றாண்டில், ஒரே நாளில் இவ்வளவு அதிகமாக மழை பெய்தது அதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.