பவானிபூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி வெற்றி: 58832 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சாதனை
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பவானிபூர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் 58832 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்துள்ளார். 84512 வாக்குகள் பெற்று மம்தா பானர்ஜி வென்றுள்ளார்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கடந்த மே மாதம் அமோக வெற்றி பெற்றது. 213 இடங்களில் வென்று திரிணாமுல் காங்கிரஸ் அங்கு ஆட்சியை பிடித்தது. பாஜக 77 இடங்களில் வென்று பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் மீண்டும் வெற்றிபெற்றாலும் அங்கு முதல்வர் மம்தா பானர்ஜி தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவிற்கு சென்ற முன்னாள் நண்பர் சுவேண்டு அதிகாரியிடம் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார்.

தோல்வி
இது அவருக்கு மிகப்பெரிய அவமானமாக அமைந்த நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக மம்தா பானர்ஜி தயாரானார். மம்தா பானர்ஜி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். 6 மாதங்களுக்குள் அவர் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆக வேண்டும் என்ற நிலையில்தான் பவானிபூர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோபன்தேப் சட்டோபாத்யாய் பவானிப்பூர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் இங்கு இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார்.

வாக்கு எண்ணிக்கை
இந்த பவானிபூர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலில் மம்தாவை எதிர்த்து பாஜக சார்பாக ப்ரியங்கா டிப்ரேவால் போட்டியிட்டார். மொத்தம் 21 சுற்றுகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. கடந்த வியாழக்கிழமைதான் இங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 57 சதவிகித வாக்குகள் பதிவானது.

முன்னிலை
அங்கு மொத்தம் 3 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் ஒன்றரை லட்சத்திற்கும் கொஞ்சம் கூடுதலான வாக்காளர்களே வாக்குகளை பதிவு செய்தனர். இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தொடக்கத்தில் இருந்தே மம்தா பானர்ஜி முன்னிலை வகித்து வந்தார். தபால் வாக்கு எண்ணிக்கையிலும், பின் அடுத்தடுத்த வாக்கு எண்ணிக்கையிலும் மம்தா பானர்ஜிதான் முன்னிலை வகித்தார்.

வெற்றி
இந்த நிலையில் 21 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் முதல்வர் மம்தா பானர்ஜி பவானிபூர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் 58832 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்துள்ளார். 84512 வாக்குகள் பெற்று மம்தா பானர்ஜி வென்றுள்ளார். அந்த தொகுதியில் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளர் ஒருவர் பெற்ற வெற்றியாகும் இது. 25680 வாக்குகள் மட்டுமே பெற்று பாஜக சார்பாக போட்டியிட்ட ப்ரியங்கா டிப்ரேவால் தோல்வி அடைந்துள்ளார்.
முதல்வரான 6 மாதங்களுக்குள் எம்எல்ஏ ஆக வேண்டும் என்பதால் இன்றைய தேர்தல் முடிவுகள் மம்தா பானர்ஜிக்கு முக்கியமானதாக பார்க்கப்பட்டது . இந்த நிலையில் இடைத்தேர்தலில் வென்று மம்தா முதல்வர் பதவியை தக்க வைத்துள்ளார்.

வேறு தொகுதி
பவானிபூர் தொகுதி தவிர்த்து முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள சாம்சேர்கஞ்ச் தொகுதி, ஜாங்கிபூர் தொகுதியிலும் இன்று சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இரண்டு எம்எல்ஏக்கள் பலியான நிலையில் இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்தது குறிப்பிடத்தக்கது.ஜாங்கிபூர் தொகுதியில் திரிணாமுல் வேட்பாளர் ஜாகிர் உசைன் முன்னிலை வகித்து வருகிறார். சாம்சேர்கஞ்ச் தொகுதியில் திரிணாமுல் வேட்பாளர் அமீருல் இஸ்லாம் முன்னிலை வகித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications