பள்ளிகளில் பகவத் கீதை: 1000 ஆசிரியர்களை நியமிக்கிறது ஹரியானா அரசு
சண்டிகர்: பள்ளிப் பாடங்களில் பகவத்கீதை ஸ்லோகங்களை அறிமுகப்படுத்த ஹரியானா மாநில ஆளும் பாஜக அரசு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை (எஸ்சிஇஆர்டி) அணுகியுள்ளது. இதனையடுத்து வரும் கல்வியாண்டு முதல் பகவத் கீதை பாடத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறைக்கு எஸ்சிஇஆர்டி பரிந்துரை செய்துள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், ஹரியானாவிலுள்ள பள்ளிகளில் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அடுத்த கல்வி ஆண்டு முதல் பகவத் கீதையை பாடமாக சேர்க்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதுபற்றி சமீபத்தில் பேசிய ஹரியானா கல்வித்துறை அமைச்சர் ராம் பிலாஸ் ஷர்மா கூறுகையில், 'பகவத் கீதை வாழ்க்கையை எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது என்பதை சொல்லிக் கொடுக்கிறது. மனஅழுத்தத்தை போக்கும் வழிகளை கற்றுக் கொடுக்கிறது. கீதையை வயதானவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று ஒதுக்கி விட முடியாது. வாழ்க்கை முழுவதும் ஒருவர் கீதையை வழிகாட்டியாக படிக்க தகுந்தது. கீதைதான் நமது வாழ்க்கை முறை. கீதையே நமது அறிவியல். கீதையே நமது பிரச்சனைகளுக்கு தீர்வு என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து பகவத் கீதையை பாடத்திட்டத்தில் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில உயர்கல்வித்துறை இயக்குநர் டி.சி.குப்தா, பள்ளி அளவில் சமஸ்கிருதம் பயிலும் மாணவர்கள் மட்டுமல்லாது ஆங்கிலம் மற்றும் இந்தியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட பகவத் கீதை ஸ்லோகங்களையும் கற்றுக்கொள்ளும் வகையில் எளிமைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
மாநிலம் முழுவதும் சமஸ்கிருத மொழியை பரப்ப திட்டமிட்டுள்ள ஹரியானா மாநில பாஜக அரசு பள்ளிப் பாடத்திட்டங்களில் பகவத்கீதை ஸ்லோகங்களையும் அறிமுகப்படுத்த உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஆயிரம் ஆசிரியர்களையும் பணியமர்த்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமஸ்கிருதம் பயிலுபவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளதாகவும் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது என்று அம்மாநிலத்தில் பாஜக மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications