ஜெ. வழக்கில் பவானிசிங்கை நீக்க கோரிய மனு மீதான விசாரணை.. வேறு அமர்வுக்கு திடீர் மாற்றம்!
பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வக்கீலாக ஆஜராகும் பவானிசிங்கை, நீக்கம் செய்ய க.அன்பழகன் தரப்பு தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணை வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
கர்நாடக தலைமை நீதிபதி வகேலா அமர்வு முன்னிலையில், அன்பழகன் ரிட் மனு மீதான விசாரணை நடந்து வந்தது. நேற்று விசாரணை நடத்திய வகேலா பெஞ்ச், அரசு வக்கீலாக பவானிசிங்கை நியமிக்கும் அதிகாரம் தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு உள்ளதா, இல்லையா என்பது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டது. பவானிசிங் தரப்பும், கர்நாடக அரசு தரப்பும் கூட இதில் பதிலளிக்க அந்த பெஞ்ச் உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று மீண்டும் விசாரணை தொடர்ந்தது. அப்போது தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சார்பிலும் பதில் தாக்கல் செய்யப்பட்டது. பவானிசிங் தரப்பிலும் வாதம் எடுத்து வைக்கப்பட்டது.
பவானிசிங் தரப்பில் ஆஜரான வக்கீல் "ஏற்கனவே, ஒருமுறை பவானிசிங்கை நீக்க கோரிய அன்பழகன் மனுவை வகேலாதான் விசாரித்தார். அப்போது பவானிசிங்கை நீக்க உத்தரவிட்டார். இப்போது ஜெயலலிதா வழக்கில் மேல் முறையீட்டு மனு நடந்து வருகிறது. அன்பழகன் தரப்பில் இப்போது அதே கோரிக்கையை வலியுறுத்தி ரிட் தாக்கல் செய்துள்ளனர். மீண்டும் வகேலா தலைமையிலான பெஞ்ச் இதை விசாரிக்க ஆரம்பித்துள்ளது.
ஏற்கனவே இதேபோன்ற கோரிக்கையை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி வகேலா என்பதால், இப்போதும் அவரே விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே வேறு நீதிபதி விசாரிக்க வேண்டும்" என்று கோரிக்கைவிடுத்தார்.
இதை வகேலா தலைமையிலான அமர்வு ஏற்றுக் கொண்டு, வேறு அமர்வுக்கு வழக்கை மாற்ற உத்தரவிட்டது. வேறு அமர்வில் இடம்பெறப் போகும் நீதிபதிகள், யார்-யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. அந்த அறிவிப்பு வெளியான பிறகு வழக்கு என்று மீண்டும் எடுத்துக் கொள்ளப்படும் என்பதும் தெரியவரும். அனேகமாக இவ்வார இறுதிக்குள் மீண்டும் வேறு அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.