பஞ்சாப், ஹரியானாவில் காங்கிரஸ் இரண்டாக உடைகிறதூ! தனிக் கட்சி தொடங்குகின்றனர் முன்னாள் முதல்வர்கள்!!
சண்டிகர்: பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இரு மாநிலங்களின் முன்னாள் முதல்வர்களான அம்ரீந்தர்சிங், பூபிந்தர்சிங் ஹூடா ஆகியோர் தனிக் கட்சிகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வியைத் தழுவியது. அப்போது முதலே தேர்தலில் காங்கிரஸ் முகமாக முன்னிறுத்தப்பட்ட ராகுல் காந்திக்கு எதிராக தொடர்ச்சியாக கலகக் குரல்கள் வெடித்து வருகின்றன.

மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் கட்சி மேலிடத்தைக் கடுமையாக விமர்சித்து வந்தார். மேலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்து ஜி.கே.வாசன் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் உதயமானது.
இதேபோல் பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலும் காங்கிரஸ் கட்சி பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் முன்னாள் முதல்வரும், லோக்சபா எம்.பி.,யுமான அம்ரீந்தர் சிங், ராகுல் மீது கடும் அதிருப்தியில் உள்ளார்.
ராகுலின் ஆதரவாளரான பிரதாப்சிங் பஜ்வா பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக பதவி வகிக்கிறார். பஜ்வாவுக்கும் அம்ரீந்தர் சிங்குக்கும் ஏழாம் பொருத்தம் என்பதால் கோஷ்டி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
இதேபோல் ஹரியானா முன்னாள் முதல்வரான பூபீந்தர்சிங் ஹூடாவும் ராகுல் மீது கோபத்தில் உள்ளார். ராகுலின் விசுவாசியும் ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவருமான அசோக் தன்வரை அவரால் சமாளிக்க முடியவில்லை. இதனால் அம்ரீந்தர் சிங், பூபீந்தர்சிங் ஹூடா ஆகியோர் காங்கிரசிலிருந்து வெளியேறி தங்கள் மாநிலங்களில் தனித் தனியாக புதிய கட்சிகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
இதனால் காங்கிரஸ் மேலிடம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications