கர்நாடகாவில் 100சிசி பைக்குகளில் இனி பின் சீட் இருக்காது... புதிய மாற்றம் என் தெரியுமா?
இனி வரும் காலங்களில் 100 சிசி பைக்குகளில் இரண்டு பேர் செல்லக்கூடாது என புதிய சட்டத்தை பிறப்பித்துள்ளது கர்நாடக அரசு.
பெங்களூர்: இனி வரும் காலங்களில் 100 சிசி பைக்குகளில் இரண்டு பேர் செல்லக்கூடாது என புதிய சட்டத்தை பிறப்பித்துள்ளது கர்நாடக அரசு. இந்த புதிய சட்டத்தின் படி இனி வரக்கூடிய புதிய 100 சிசி அல்லது அதற்கும் குறைவான சிசி உள்ள பைக்குகளில் பின் சீட்டே இருக்காது எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த 16ம் தேதி கர்நாடக போக்குவரத்து துறையில் வித்தியாசமான புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அதில் கர்நாடகாவில் ஓடிக்கொண்டிருக்கும் 100சிசிக்கும் குறைவான பைக்குகளில் இருந்து பின் சீட்டுகளை அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டது. இதற்காக பழைய கர்நாடக போக்குவரத்து சட்டத்தின் சில பகுதிகளை அந்தப் புகாரில் குறிப்பிட்டு இருந்தனர். இந்த புகாரை அளித்தவரின் பெயர் வெளியிடப்படவில்லை.

ஏற்கனேவே எழுதப்பட்ட கர்நாடக போக்குவரத்து சட்டத்தின் படி , 100சிசி அல்லது 100சிசி க்கும் குறைவான பைக்குகளில் பின் சீட்டில் யாரும் உட்காரக் கூடாது என்றும், மேலும் பின் சீட் அந்த வாகனங்களில் இருந்து அகற்றப்படவேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதை தனது புகாரில் குறிப்பிட்டிருந்த மனுதாரர் உடனடியாக இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து பலவருடங்களாக பின்பற்றப்படாமல் இருந்த இந்தச் சட்டத்தை தற்போது நடைமுறைக்கு கொண்டு வரும் முடிவை எடுத்திருக்கிறது கர்நாடக அரசு. இதற்கான அறிக்கையை வெளியிட்ட கர்நாடக போக்குவரத்து துறை கமிஷனர் பி.தயாநந்தா பேசியதாவது "இந்த சட்டம் பல வருடமாக கர்நாடகாவில் உள்ளது. ஆனால் இதை யாரும் முறையாக கடைபிடிக்காமல் இருந்தனர். தற்போது இந்த சட்டத்தை மிகவும் கண்டிப்புடன் கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. இது போன்ற சட்டங்கள் ஏற்கனவே சில மாநிலங்களில் வழக்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது." என்றார்.
இந்த சட்டம் குறித்த முறையான இறுதி தகவல் வந்த பின் இது கடைபிடிக்கத் தொடங்கப்படும் என கூறப்படுகிறது. விபத்துக்களை குறைப்பதற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலும் 100சிசி க்கும் குறைவான பைக்குகளில் விபத்து ஏற்படும் போது பின்சீட்டில் இருப்பவரே அதிகமாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கையை வாகன தயாரிப்பு நிறுவங்களுக்கு கர்நாடக போக்குவரத்து துறை அனுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications