நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் அரசு வெற்றி-திடீரென தேஜஸ்வி வீட்டுக்குள் போலீஸ் நுழைந்ததால் டென்ஷன்!
பாட்னா: பீகார் சட்டசபையில் முதல்வர் நிதிஷ்குமார் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. முன்னதாக மாயமான ஜேடியூ எம்.எல்.ஏக்களை எதிர்க் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடத்தி வைத்திருப்பதாக கூறி அவரது வீட்டுக்குள் போலீஸ் நுழைந்ததால் பதற்றம் ஏற்பட்டது.
பீகாரில் 4 ஆண்டுகளில் 2 முறை கூட்டணிகளை மாற்றி 3-வது முறையாக முதல்வராக பதவியேற்ற நிதிஷ்குமார் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார்.

3-வது முறை முதல்வர்: பீகாரில் 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றினாலும் கூட்டணி கட்சியான ஜேடியூவின் நிதிஷ்குமாரை முதல்வராக்கியது. ஆனால் 2 ஆண்டுகளில் பாஜகவுடனான கூட்டணியை நிதிஷ்குமார் முறித்துக் கொண்டு பதவியை ராஜினாமா செய்தார். அதே நேரத்தில் உடனடியாக ஆர்ஜேடி-காங்கிரஸ்- இடதுசாரிகளுடன் இணைந்து மீண்டும் முதல்வரானார் நிதிஷ்குமார். தற்போது இந்த கூட்டணியையும் முறித்துக் கொண்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார். இப்போது பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராகி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி வெற்றி பெற்றார்.
பெரும்பான்மை: பீகார் சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவை 122 எம்.எல்.ஏக்கள். இன்றைய வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் அரசுக்கு 129 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்தனர். லாலுவின் ஆர்ஜேடி எம்.எல்.ஏக்கள் 3 பேர் நிதிஷ் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஜேடியூ எம்.எல்.ஏக்கள்தான் கட்சி மாறி வாக்களிப்பர் என்கிற எதிர்பார்ப்பு பொய்யாகிப் போய், தேஜஸ்வியுடன் கடைசி நிமிடம் வரை இருந்த 3 எம்.எல்.ஏக்கள் சட்டசபை கூட்டம் தொடங்கியதும் ஆளும் தரப்பு பக்கம் போய் அமர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் 3 எம்.எல்.ஏக்களும் எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டும் என சட்டசபையிலேயே தேஜஸ்வி யாதவ் வேண்டுகோள் விடுத்தும் பார்த்தார். ஆனாலும் 3 எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் அரசுக்கு ஆதரவாகவே வாக்களித்தனர். இது லாலுவின் ஆர்ஜேடிக்கு பெரும் பின்னடைவாகும்.
தேஜஸ்வி வீட்டுக்குள் நுழைந்த போலீஸ்: திடீரென நேற்று முதல் நிதிஷ்குமாரின் ஜேடியூ கட்சியின் 6 எம்.எல்.ஏக்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தனர். இந்த 6 பேரையும் தொடர்பு கொள்ள முடியாமல் நிதிஷ் தரப்பு தத்தளித்தது. இந்த நிலையில் மாயமான 6 ஜேடியூ எம்.எல்.ஏக்களையும் லாலுவின் மகனும் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கடத்தி சென்று தமது வீட்டில் சிறை வைத்துவிட்டதாக நிதிஷ்குமார் தரப்பு குற்றம் சாட்டியது. இதனையடுத்து திடீரென போலீஸ் படை தேஜஸ்வி யாதவ் வீட்டுக்குள் நுழைந்து சோதனை நடத்தியது. இதற்கு எதிராக தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி கட்சியின் போராட்டம் நடத்தினர். இதனால் தேஜஸ்வி வீட்டு முன்பாக பெரும் பதற்றம் நிலவியது.
பீகார் சட்டசபை பலம்: பீகார் சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 243. பெரும்பான்மைக்கு தேவை 122 எம்.எல்.ஏக்கள்.
முதல்வர் நிதிஷ்குமார் ஆதரவு: 128 எம்.எல்.ஏக்கள்
பாஜக- 78
ஜேடியூ 45
மாஞ்சியின் ஹிந்துஸ்தான் ஆவாம் மோர்ச்சா- 4
சுயேட்சை-1.
எதிர்க்கட்சிகள்: மொத்தம் 114 எம்.எல்.ஏக்கள்
லாலுவின் ஆர்ஜேடி- 79
காங்கிரஸ் 19
இடதுசாரிகள் 16
ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி-1
தற்போது சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் 3 எம். எல்.ஏக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததால் ஆர்ஜேடி பலம் 76 ஆகவும் குறைந்துள்ளது.












Click it and Unblock the Notifications