15 வயது மாணவி பலாத்கார விவகாரம்- எம்.எல்.ஏ ராஜ்பல்லா யாதவ் சொத்துக்கள் முடக்கம்
பாட்னா: பீகார் மாநிலத்தில் 15 வயதான சிறுமியை பலாத்காரத்திற்கு உள்ளாக்கி தலைமறைவாக இருக்கும் எம்.எல்.ஏ ராஜ்பல்லா யாதவின் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.
பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் ராஜ்பல்லா யாதவ். மாநிலத்தை ஆளும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த இவர் நாலந்தா பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியான 15 வயது சிறுமியை கடந்த 6 ஆம் தேதி கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமியே போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து ராஜ்பல்லா யாதவை கைது செய்ய பீகார் மாநில போலீஸ் டி.ஐ.ஜி உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில் ராஜ்பல்லா யாதவை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக அம்மாநில ராஷ்டரிய ஜனதா தளம் தலைவர் ராமச்சந்திரா புர்பே அறிவித்துள்ளார். .
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆசைவார்த்தை கூறி, மயக்கி பாலியல் உறவுக்காக எம்.எல்.ஏ.விடம் ஒப்படைத்த சுலேகா தேவி என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அவருடன் சுலேகாவின் தாய் ராதா தேவி, சோட்டி குமாரி, துள்சி தேவி, மோத்தி ராம் ஆகியோரையும் கைது செய்த ஹில்சா நகர போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இதற்கிடையே கடந்த 15 நாட்களாக தலைமறைவாக இருக்கும் ராஜ்பல்லா யாதவின் சொத்துகளை ஜப்தி செய்யும்படி நேற்று கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து அவரது சொந்த ஊரான நவாடா மாவட்டத்தில் உள்ள பத்ரா கிராமத்துக்கு இன்று கோர்ட் அலுவலருடன் கிட்டதட்ட 150 போலீசார் வந்து அவருடைய வீடு, தோட்டம் உட்பட அனைத்து சொத்துக்களையும் ஜப்தி செய்தனர்.












Click it and Unblock the Notifications